April 27, 2019 தண்டோரா குழு
மதுரை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான நடராஜன் பணியிட மாற்றம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மதுரையில் கடந்த 20 ஆம் தேதி பெண் அதிகாரி ஒருவர் வாக்குப்பதிவு ஆவணங்கள் உள்ள அறைக்குள் சிலருடன் நுழைந்ததாகவும், அவர் அங்கே 2 மணி நேரம் இருந்ததாகவும், முக்கிய சில ஆவணங்களை எடுத்துச்சென்றதாகவும் தகவல் பரவியது. இதையடுத்து எதிர்க்கட்சியினர் அங்கே வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மா.கம்யூ., இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தியது. ஆனால், தாசில்தார் உள்ளிட்ட சிலரை சஸ்பென்ட் செய்த நிர்வாகம், மாவட்ட தேர்தல் அதிகாரி நடராஜன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து, மதுரை மா.கம்யூ., வேட்பாளர் சு.வெங்கடேசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். அது நீதிபதிகள் மணிக்குமார், சுப்பரமணியம் பிரசாத் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் தலைமை தேர்தல் ஆணையம் தரப்பில் மதுரை மக்களவை தொகுதி வாக்குப்பதிவு இயந்திரம் வைத்துள்ள மையத்தில் சில பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தன. ஆட்சியரின் உதவியாளர் அறிவுறுத்தலின் பேரில் வட்டாச்சியர் வாக்கு எண்ணும் மையத்திற்குள் சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக தமிழக தேர்தல் அதிகாரி அனுப்பிய பரிந்துரை அடிப்படையில் 2 நாட்களில் முடிவு எடுக்கப்படும் என வாதிடப்பட்டது. அப்போது, எல்லா அரசு அதிகாரிகளும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள். தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் அரசு அதிகாரிகள் இருக்கும் போது தமிழக தேர்தல் அதிகாரிக்கு இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க அதிகாரம் இல்லையா? நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு மாநில தேர்தல் அதிகாரி போஸ்ட்மேன் மாதிரிதான் அவரால் யார் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியாது என ஆணையம் வாதிட்டது.
பின்னர், மதுரை ஆட்சியரின் உதவியாளர் மீது என்ன நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டது என நிதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் குறிப்பிட்ட நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவித்த நீதிபதிகள் வழக்கை சற்றுநேரம் ஒத்திவைத்தனர். இந்நிலையில், தேர்தல் ஆணைய நடைமுறைகளில் தலையிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தாசில்தாரை உள்ளே செல்ல அனுமதித்த அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உதவி போலீஸ் ஆணையர், ஆட்சியரின் தனி அதிகாரி, பணியில் இருந்த காவல் அதிகாரிகள் மாற்ற வேண்டும்.சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்குப் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறிய நீதிபதிகள் மதுரை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியும் ஆன நடராஜனை மாற்ற உத்திரவிட்டனர். மேலும், துணை தேர்தல் அதிகாரி, ஆட்சியரின் உதவியாளர், காவல் உதவி ஆணையர் ஆகியோரையும் மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.