April 24, 2019
தண்டோரா குழு
தமிழகத்தில் நடைபெற உள்ள 4 தொகுதி இடைத்தேர்தலில் அமமுகவுக்கு தேர்தல் ஆணையம் பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கியது.
தமிழகத்தில் ஏற்கனவே 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் கடந்த 18ம் தேதி நடந்த நிலையில் காலியாக உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த நான்கு தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல், ஏப்ரல் 22ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக, அமமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் ஏற்கனவே அறிவிக்கப்பட்டன.
இதற்கிடையில், மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பரிசுப்பெட்டி சின்னத்தில் அமமுக போட்டியிட்டது. இதையடுத்து, நடைபெறவுள்ள 4 தொகுதி இடைத்தேர்தலில் அமமுகவுக்கு பரிசு பெட்டகம் சின்னம் ஒதுக்க வேண்டும் என தினகரன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் நடைபெற உள்ள 4 தொகுதி இடைத்தேர்தலில் அமமுகவுக்கு பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கி தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.