April 23, 2019
தண்டோரா குழு
இலங்கையில் நடைபெற்ற கொடூர தீவிரவாத தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஈஸ்டர் பண்டிகையையொட்டி இலங்கையில் நேற்றைய தினம் தேவாலயங்களில் பொதுமக்கள் குவிந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. இந்த குண்டு வெடிப்பில் 321 பேர் பலியாகினர். 500க்கும் மேற்பட்ட பொது மக்கள் பலத்த காயத்துடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரை கொண்டு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக 24க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையில், நியுசிலாந்து கிறிஸ்ட் சர்ச்சில் மசூதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாகவே ஈஸ்டர் தினத்தில் கிறிஸ்துவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இலங்கை அமைச்சர் ருவன் விஜேவர்த்தனே தெரிவித்துள்ளார். இந்நிலையில், இலங்கை தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்று கொண்டுள்ளது.
ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் செய்தி நிறுவனமான ‘அமாக்’ நிறுவனம் வாயிலாக தங்கள் அமைப்பு குண்டுவெடிப்பை நடத்தியதாக ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.