April 18, 2019 தண்டோரா குழு
இளம் வாக்காளர்கள், புதிய வாக்காளர்கள் என அனைத்து வாக்காளர்களும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த பிறகு சி.பி.எம். வேட்பாளர் பி.ஆர். நடராஜன் வேண்டுகோள் விடுத்தார்.
17-வது நாடாளுமன்றத் தேர்தலிக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இதில், 97 நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் 38 தொகுதிகளிலும், பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஒரு தொகுதிக்கான தேர்தல் இன்று நடக்கிறது. இதனுடன் தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் நடந்து வருகிறது. கோவையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கோவை நாடாளுமன்ற தேர்தலில் சி.பி.ஐ.(எம்) பி.ஆர்.நடராஜனும், அ.தி.மு.க. கூட்டணி சார்பில் பா.ஜ.க.வின் சி.பி. ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்கள் உள்பட 14 பேர் போட்டியிட்டுள்ளனர்.
வாக்குபதிவிற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று, இன்று காலை 7 மணிக்கே முன்பே மக்கள் வாக்குச்சாவடி மையங்கள் முன்பு தங்களது வாக்குகளை பதிவு செய்ய பொதுமக்கள் காத்திருந்தனர். மேலும், தங்களது வாக்குகளை செலுத்த பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கோவை மணி மேல்நிலை பள்ளியில் பெரும்பாலானோர் காலை 6.30 மணி முதலே காத்திருந்தனர். இதேபோல், அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் மக்கள் தற்போது வாக்களிக்க வந்து கொண்டிருக்கின்றனர். கோவை நாடாளுமன்ற வேட்பாளர் பி.ஆர். நடராஜன் சரியாக 7.23 மணியளவில் தனது மனைவி மற்றும் இரு மகள்களுடன் வந்திருந்து அரசு தொழில்நுட்ப கல்லூரியில் தனது வாக்கை பதிவு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பி.ஆர். நடராஜன் கூறுகையில்,
“ இந்த ஜனநாயக நாட்டில் நடைபெறும் தேர்தல் திருவிழா இது. இளம் வாக்காளர்கள், புதிய வாக்காளர் என அனைத்து வாக்காளர்களும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். கடந்த 5 ஆண்டுகளாக தமிழக மக்களின் உரிமைகளை பறித்த பா.ஜ.க. ஆட்சியை அகற்றிட சுத்தி அரிவாள் சின்னத்தில் தனக்கு பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும். யாருக்கு வாக்களித்தோம் என வி.வி.பேட் இயந்திரம் 6 வினாடிகள் காண்பிக்கிறது. அது சரியாக செயல்படுகிறது. இதனை தான் வரவேற்கிறேன், என தெரிவித்தார்.