April 11, 2019
தண்டோரா குழு
ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சமடைந்திருந்த விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை லண்டன் போலீசார் கைது செய்தனர்.
கடந்த முறை அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்த போது டிரம்ப்பை எதிர்த்து போட்டியிட்ட ஹிலாரி கிளின்டனின் கட்சியை சார்ந்த முக்கிய தலைவர்களின் ஈ மெயில்களை ஜூலியன் அசாஞ்சே தேர்தலுக்கு முன்னர் தனது விக்கிலீக்ஸ் இணையதளத்தில் வெளியிட்டார். ஹிலாரி கிளின்டன் கட்சி தலைவர்கள் நடத்திய அந்த உரையாடல்கள் திருட்டுத்தனமாக எடுக்கப்பட்டு பொது வெளியில் வெளியிடப்பட்டது. அப்படி இவர் செய்ததனாலேயே டிரம்ப்பின் வெற்றி வாய்ப்பு அதிகமானதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவரை கைது செய்ய அமெரிக்கா தீவிரமாக முயற்சித்தது. ஜூலியன் அசாஞ்சே கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் லண்டனில் உள்ள ஈகுவேடார் தூதரகத்தில் தஞ்சம் புகுந்தார்.
இந்நிலையில் ஈக்வடார் நாடு அவருக்கு வழங்கிவந்த ஆதரவை விலக்கிக்கொண்டு நிலையில் இன்று லண்டன் போலீசாரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசார் தரப்பில், “ ஈக்வேடார் அரசு அசாஞ்சேவுக்கு வழங்கிய அடைக்கலத்தை வாபஸ் பெற்றதை தொடர்ந்து அவர் தூதரக அதிகாரிகளால் அழைக்கப்பட்டார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார் விரைவில் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்துக்கு அழைத்து செல்லப்படுகிறார்” என்று தெரிவித்துள்ளனர்.