April 11, 2019
தண்டோரா குழு
கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் பணம் வழங்க முயன்ற அமமுக கட்சியினர் 4 பேரை பிடித்து பாஜக, அதிமுக கூட்டணி கட்சியினர் தேர்தல் பறக்கும் படையினரிடம் ஒப்படைத்தனர்.
கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்திற்கு உட்பட்ட தென்றல் நகர், ராஜேந்திரா நகர், ஸ்ரீராம் நகர், பழையூர் உள்ளிட்ட பகுதியில் அமமுக கட்சியினர் 4 பேர் வீடு வீடாகச் சென்று வீட்டில் உள்ளவர்களின் வாக்காளர் அடையாள அட்டை எண், வரிசை எண், வீட்டில் உள்ளவர்களின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை, செல் நம்பர் ஆகியவற்றை நோட்டில் எழுதி வரும் 16ம் தேதி உங்கள் வீட்டிற்கு பரிசுப்பெட்டி வரும் வந்தவுடன் தினகரனுக்கு வாக்களிக்குமாறு கூறிச் செல்வதாக அப்பகுதி பாஜக, அதிமுக கூட்டணி கட்சியினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, பாஜக, அதிமுக கூட்டணி கட்சியினர் அங்கு சென்று
அமமுக கட்சியினரை பிடித்து தேர்தல் பறக்கும் படையினரிடம் ஒப்படைத்தனர். அவர்களின் செல் நம்பர்களை பெற்றுக் கொண்ட தேர்தல் பறக்கும் படையினர் தாங்கள் அழைக்கும்போது விசாரணைக்கு வரவேண்டும் என அனுப்பிவைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இதே போல் பெரியநாயக்கன்பாளையம் பகுதியிலும் இதேபோல் அமமுகவினர் வீடு வீடாகச் சென்று தகவல்களை சேகரித்ததாக புகார் தெரிவித்தனர்.