April 9, 2019
தண்டோரா குழு
தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கோவையில் இன்று நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 18ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுவதால் பிரசாரத்திற்கு இன்னும் 8 நாட்களே உள்ளன. இதற்கிடையில், கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக கோவை கொடிசியா வளாகத்தில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. கொடிசியா மைதானத்தில் இன்று மாலை 6 மணியளவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார்.
இந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் கோவை நீலகிரி , திருப்பூர், பொள்ளாச்சி, ஈரோடு ஆகிய கொங்கு மண்டலத்திற்கு உட்பட்ட மக்களவைத் தொகுதி வேட்பாளர்களுக்கு பிரதமர் மோடி ஆதரவு திரட்ட உள்ளார்.
இப்பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தனி விமானம் மூலம் கோவைக்கு வரவுள்ளார்.அவரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரவேற்று பொதுக்கூட்டத்திற்கு அழைத்து வரவுள்ளார். பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.
பிரதமர் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் மட்டும் கோவை, திருப்பூர், ஈரோடு நீலகிரி உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 3,000 மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.