April 8, 2019
தண்டோரா குழு
கோவையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 1 கோடியே 76 இலட்ச ரூபாய் மறாறும் உரிமம் இல்லாத துப்பாக்கி, தோட்டாக்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்படும் பணம், பொருட்கள் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று கோவை சங்கனூர் சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் ராஜேஸ்வரி தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சிங்காநல்லூர் வரதாராஜபுரம் பகுதியில் உள்ள சேப் கார்டு ரைட்டர் என்ற தனியார் நிறுவனம் ஏ.டி.எம்.ல் பணம் செலுத்த எடுத்து சென்ற வாகனத்தை சோதனையிட்டனர். அதில் உரிய ஆவணங்கள் இல்லாத ஒரு கோடியே 76 இலட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யபட்டது. அப்பணத்திற்கு உரிய ஆவணங்கள் உள்ளதாக அந்நிறுவனத்தினர் கூறியதை அடுத்து, ஆவணங்களை சமர்பித்த பின்னர் பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே வாகனத்தில் இருந்த ஜம்மு காஷ்மீரை சேர்ந்த காவலாளி சச்சின்குமாரிடம் இருந்து உரிமம் இல்லாத ரைபிள் மற்றும் ஐந்து தோட்டாக்கள் பறிமுதல் செய்யபட்டது.