March 29, 2019
தண்டோரா குழு
பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில், சரவண பவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு, உயர்நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை சேர்ந்தவர் ஜீவஜோதி. உணவக மேலாளரின் மகளான இவரது கணவர் பிரின்ஸ் சாந்தகுமார். 2001-ம் ஆண்டு ஜீவஜோதியை மறுமணம் செய்யும் நோக்கத்தில் சாந்தகுமாரை கொடைக்கானலுக்கு கடத்திச் சென்று ராஜகோபால் கொலை செய்ததாக குற்றம் சாற்றப்பட்டது.
சரவண பவன் ஹோட்டலில் பணிபுரிந்த, வேதாரண்யத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவரது மகள் ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார், கடந்த 2001ஆம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்டார்.சாந்தகுமாரை, கொடைக்கானல் கடத்திச் சென்று, கொலை செய்ததாக, சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால், டேனியல், கார்மேகம், காசி விஸ்வநாதன், உசேன், தமிழ்ச்செல்வன், முருகானந்தம், சேது, பாண்டுரங்கன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை பூந்தமல்லி நீதிமன்றம், ராஜகோபாலுக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும், 55 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தது.
கொலைக்கு உடந்தையாக இருந்த டேனியல், கார்மேகம், ஹூசைன், காசி விஸ்வநாதன், தமிழ்செல்வன், முருகானந்தம், சேது, பட்டுரங்கம் ஆகியோருக்கு 7 முதல் 9 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்பட்டது. கடத்தல் வழக்கில் ராஜகோபாலுக்கு 3 ஆண்டும், மற்ற 8 பேருக்கு இரண்டு ஆண்டுகளும் தண்டனை விதிக்கப்பட்டது.இதை எதிர்த்து, ராஜகோபால் சார்பிலும், விதிக்கப்பட்ட தண்டனையை மேலும் உயர்த்தி வழங்க கோரி காவல்துறையினர் சார்பிலும், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கில் 2009-ம் ஆண்டு தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பி.கே. மிஸ்ரா, பானுமதிஆகியோர் அடங்கிய அமர்வு, கீழ் நீதிமன்றம் அளித்த 10 ஆண்டு சிறைதண்டனையை ஆயுள் தண்டனையாக அதிகரிப்பதாக அறிவித்தது.
இதையடுத்து, உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில், சரவண பவன் ராஜகோபால் சார்பில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.இதன் மீதான விசாரணை முடிவுற்ற நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் என்.வி.ரமணா, தினேஷ் மகேஸ்வரி அமர்வு இன்று தீர்ப்பளித்தது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், ராஜகோபாலுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்தது. தற்போது பிணையில் இருக்கும் ராஜகோபால், ஜூலை 7-ம் தேதிக்குள் சரணடைய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.