March 29, 2019
தண்டோரா குழு
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் ஒரேசின்னமாக பரிசுப்பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் குக்கர் சின்னத்தை அமமுகவிற்கு ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. அதேசமயம் வரும் தேர்தலில் அமமுக தரப்புக்கு பொது சின்னம் ஒதுக்குவது பற்றி பரிசீலிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து, தேர்தலில் தங்கள் கட்சிக்கு பொது சின்னம் ஒதுக்க வேண்டும் என்று அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி, தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தார்.
இந்நிலையில் அமுமுகவுக்கு பரிசுப் பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இதற்காக டிடிவி தினகரன் தேர்தல் ஆணையத்திற்கும் உச்ச நீதிமன்றத்திற்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
இச்சின்னம் ஒதுக்கப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்த அமமுக வினர் பரிசுப் பெட்டி சின்னத்தை மக்களிடம் பிரபலப்படுத்துவோம் என்று தெரிவித்துள்ளனர்.