March 25, 2019
தண்டோரா குழு
நான் எம்.பியானால் கோவை பெங்களூர் இரவு நேர ரயில் கண்டிப்பாக இயக்கப்படும் என கோவை சிபிஎம் வேட்பாளர் பி.ஆர் நடராஜன் கூறியுள்ளார்.
திமுக கூட்டணியின் கோவை தொகுதிக்கான மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் இன்று வேட்பு மனு தாக்கலுக்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர்,
திமுக தலைமையில் அமைந்துள்ள மதசார்பற்ற கூட்டனி வேட்பாளராக கோவை நாடாளுமன்ற தொகுதிக்கு மனு தாக்கல் செய்துள்ளேன். கோவை நாடாளுமன்ற தொகுதியின் அமைதி வேட்பாளராக உள்ளேன். அமைதி பாதுகாக்கபட்டால் மட்டுமே கோவையின் வளர்ச்சி உத்தரவாதப் படுத்தப்படும்.கோவை நகர சிறு குறு தொழில்கள் ஜி.எஸ்.டியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதை நான் சொல்லவில்லை.தமிழக தொழில்துறை அமைச்சரே 50 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் பாதிப்பு ஏற்பட்டு 50 லட்சம் பேர் பாதித்துள்ளதாக சட்டமன்றத்திலேயே கூறியுள்ளார். கோவையில் குடிநீர் தனியார் கம்பெனிக்கு கொடுப்பதை கண்டிக்கிறோம். எனவே குறைந்த விலைக்கு குடிநீரை பொதுமக்களுக்கு கொடுக்க வேண்டும். விவசாயிகளை பாதுகாக்க வேண்டும். வளர்ச்சிக்காக அனைத்து வளர்ச்சி திட்டங்களுக்காக விவசாயிகள் மட்டுமே ஏன் தியாகம் செய்ய வேண்டும் அதற்கு மாற்று ஏற்பாடு செய்வேன். கல்வி கடன் முழுமையாக ரத்து செய்யும் பணியை செய்வதுடன் வேலை வாய்ப்பை உருவாக்குவோம். பொதுவாக மேற்கு தொடர்ச்சி மலை இயற்கை கொடுத்த கொடை வன விலங்கு வழித்தடம் பறிக்கப்பட கூடாது. வனப்பகுதி ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றப்பட வேண்டும் மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாக்கப்பட வேண்டும்.
பணப்பட்டுவாடா தொடர்பாக தேர்தல் கமிஷன் கவனத்திற்கு கொண்டு செல்வோம். மிகப்பெரும் பண பலத்துடன் ஆளும்கட்சி தேர்தலை சந்திக்க உள்ளனர் அதை தடுக்க முயல்வோம். பொள்ளாச்சி சம்பவம் கோவை மக்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது. அவ்வழக்கில் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் உயர் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் விசாரிக்கப்பட வேண்டும். ஏழு ஆண்டுகளில் தற்கொலை செய்துள்ள இளம் பெண்களை கணக்கில் எடுத்து விசாரிக்க வேண்டும். ஆட்சி மாற்றம் செய்து தான விசாரிக்க வேண்டும். கடுமையான விலைவாசி உயர்வு மற்றும் மத ரீதியில் மக்களை பிளவு படுத்தியுள்ள ஆட்சி அப்புறப்படுத்த பட வேண்டும் என எனது பரப்புரை இருக்கும்
பண மதிப்பிழப்பு சமயத்தில் சேகர் ரெட்டி வீட்டில் பணம் அடுக்கி வைத்தது அனைவருக்கும் தெரியும்.தமிழகத்தில் அவ்வளவு பெரிய கொடுமையை செய்த அரசு. ரூபாய் நோட்டில் அவ்வளவு செய்த மோடி அரசுக்கு பாடம் கற்பிக்க வேண்டும். 30 ஆண்டுகளில் முதல் முறையாக கடந்த முறை தான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது 8 புதிய ரயில்களையும் போத்தனூர் வழியாக சென்ற 5 ரயில்களையும் கோவை வழியாக திருப்பினோம். நான் பாராளுமன்ற உறுப்பினரானால் கோவை பெங்களூர் இரவு நேர ரயில் கண்டிப்பாக இயக்கப்படும் என உறுதியளிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.