March 25, 2019
தண்டோரா குழு
லேடி சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் நயன்தாரா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.இவர் இயக்குநர் சக்ரி டோலட்டி இயக்கத்தில் உருவான ‘கொலையுதிர் காலம்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் வெளியிட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நடிகர் ராதாரவி, நயன்தாரா குறித்த சர்ச்சையான கருத்தை பதிவு செய்தார்.
இதனையடுத்து ராதாரவிக்கு விக்னேஷ் சிவன், ராதிகா, சின்மயி உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதற்கிடையில் இந்த விவகாரத்தில் ராதாரவி பேச்சுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், அவர் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் திமுக தலைவரின் உடனடி நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்து அறிக்கை நடிகை நயன்தாரா வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“பொதுவாக நான் விளக்க அறிக்கை எதுவும் வெளியிடுவதில்லை. என் வேலை என்னை முன்னிறுத்தும். முதலாவதாக திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு எனது நன்றி மற்றும் பாராட்டுகள். ராதாரவி அவர்களின் வெறுக்கும் வகையிலான பேச்சுக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததற்கு நன்றிகள்.இவர் போன்ற ஆட்கள் மீதும் அவர்கள் குடும்பத்தில் வாழும் பெண்கள் மீதும் நான் மிகவும் பரிதாபப்படுகிறேன்.
என்னை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த ராதாரவியை விசாரிக்க குழு அமைக்க வேண்டும்.மூத்த நடிகரான ராதாரவி, இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டுபவராக இருந்திருக்க வேண்டும். திரைப்படத்தில் வாய்ப்பு கிடைக்காமல் போனதால் இதுபோன்று கீழ்த்தரமாக பேசி பிரபலமடைகிறார்.
நிகழ்ச்சியில் அவர் பேசும்போது பலர் கைதட்டி ரசித்து உள்ளனர்.நீங்கள் எத்தனை எதிர் விமர்சனங்கள் சொன்னாலும் நான் மீண்டும் பேயாக, சீதாவாக, கடவுளாக, தோழியாக, மனைவியாக, காதலியாக என இன்னும் பல கதாபாத்திரங்களை என் ரசிகர்களுக்காக ஏற்று நடிக்கத்தான் போகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.