March 21, 2019
தண்டோரா குழு
விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் தேர்தல் பிரசாரத்தின் போது கனிமொழிக்கு வாக்கு கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18-ந்தேதி நடைபெறுகிறது.அதனுடன் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடக்கிறது.இதற்கான மனுதாக்கல் கடந்த 19-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.இதையடுத்து,அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சிகள் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
18 சட்டமன்ற இடைத்தேர்தலில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியும் ஒன்றாகும்.இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. சின்னப்பன்,தி.மு.க. சார்பில் ஜெயக்குமார் போட்டியிடுகிறார்கள்.அவர்கள் தங்களது தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில்,அதிமுக வேட்பாளர் சின்னப்பன் நேற்று முதல் தனது பிரச்சாரத்தை தொடங்கிய நிலையில் தனக்கு வாக்களிக்குமாறு வாக்காளர்களிடம் கேட்டுக்கொண்டதுடன் தூத்துகுடி தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசைக்கும் வாக்கு கேட்டு வருகிறார்.இந்நிலையில்,நேற்று விளாத்திகுளம் பஸ் நிலையம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே சின்னப்பன் தன் பிரச்சாரத்தை துவங்கினார்.அங்கு அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி நிர்வாகிகள்,தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் வந்திருந்தனர்.
அவர்கள் மத்தியில் சின்னப்பன் பேசும் போது,விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தனக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.அப்போது,ஒரு இடத்தில் மட்டும் அவர் வாய்தவறி பாராளுமன்ற தேர்தலில் கனிமொழிக்கு வாக்களியுங்கள் என்று கூறிவிட்டார்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.மேலும் அங்கு திரண்டு நின்ற கூட்டணி கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது.இதையடுத்து கூட்டத்தில் நின்ற அ.தி.மு.க. நிர்வாகிகள் தமிழிசை பெயரை சொல்லுமாறு கூறினர்.பின் உடனே சுதாரித்து கொண்டு பாரத பிரதமரின் ஆசி பெற்ற தமிழிசைக்கு வாக்களியுங்கள் என்றார்.ஒரு அதிமுக வேட்பாளரே கனிமொழிக்கு வாய்தவறி வாக்கு கேட்ட சம்பவம் அந்த பகுதியில் சில நிமிடங்கள் சலசலப்பை ஏற்படுத்தியது.