February 25, 2019
தண்டோரா குழு
புல்வாமா தாக்குதலுக்கு பயன்படுத்திய வாகனத்தின் உரிமையாளர் சஜ்ஜத் பட் என்பதும், தாக்குதலுக்கு பயன்படுத்தியது Maruti Eeco கார் என்பதும் என்.ஐ.ஏ கண்டுபிடித்துள்ளது.
காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த பிப் 14ம் தேதி மத்திய ரிசர்வ் போலீஸ் படையை (சிஆர்பிஎப்) சேர்ந்த 2,500 வீரர்கள் 78 பேருந்துகளில் ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோது தற்கொலை படை தீவிரவாதி ஒருவன், வெடிபொருட்கள் நிரப்பிய வாகனத்தை வேகமாக ஓட்டி வந்து வீரர்கள் இருந்த பேருந்து மீது பயங்கரமாக மோதினான். இதில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 20க்கும் மேற்பட்ட வீரர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த கொடூர தாக்குதலால் நாடு முழுவதும் மக்கள் கொந்தளித்துள்ளனர். தாக்குதல் சம்பவத்துக்கு இந்திய மற்றும் உலக நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, இத்தாக்குதல் தொடர்பாக என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு ஏஜென்சி விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையில் வெடிகுண்டு தாக்குதலுக்கு பயன்படுத்தியது Maruti Eeco கார் என்பதும் காரின் உரிமையாளர் சஜத்பட் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதுமட்டுமின்றி இவர் ஆனந்தநாக் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், இவர் தாக்குதலுக்கு முன்பாக ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் இணைந்து தனது காரை வெடிகுண்டு தாக்குதலுக்கு வழங்கியுள்ளதும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, சஜத்பட்டை தேசிய புலனாய்வு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.