February 23, 2019
தண்டோரா குழு
கோவை அரசு மருத்துவமனையில் இரண்டு வயது குழந்தைக்கு எச்.ஐ.வி இரத்தம் ஏற்றியதாக எழுந்த புகாரில் துளி கூட உண்மையில்லை என சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
கோவை அரசு மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆஞ்சியோகிராம் சேவை மற்றும் மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு சேவை மையம் ஆகியவற்றை சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று துவக்கி வைத்தார்.நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சிதுறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அமைச்சர்கள் வருகையை முன்னிட்டு அரசு மருத்துவமனை முன்பாக பட்டாசுகள் வெடித்தும், மேளம் அடித்தும் அதிமுகவினர் வரவேற்பு அளிக்கப்பட்டது.
திறப்புவிழாவிற்கு பின்னர் அமைச்சர்கள் விஜயபாஸ்கர் மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.
அப்போது பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர்,
கோவை அரசு மருத்துவமனை கடந்த மூன்று ஆண்டுகளில் சிறந்த வளர்ச்சி அடைந்துள்ளது.தற்போது 6.5 கோடி மதிப்பீட்டில் ஆஞ்சியோ சென்டர் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மூளையில் ஏற்பட கூடிய பிரச்சினைகள், கல்லீரல் அடைப்பு போன்ற பிரச்சினைகளை உடனடியாக சரி செய்து சிகிச்சை அளிக்க முடியும். இந்த இயந்திரம் இன்று மக்களுக்கு அர்பணிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னைக்கு அடுத்தபடியாக கோவை அரசு மருத்துவமனையில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கோவை அரசு மருத்துவமனையில் விபத்து காய சிகிச்சை அமைக்கும் பணி 7 கோடி ரூபாய் செலவில் துவங்கியது.
தனியார் மருத்துவமனைக்கு நிகராக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. கோவை அரசு மருத்துவமனையில் இரண்டு வயது குழந்தைக்கு எச் .ஐ.வி இரத்தம் ஏற்றியதாக எழுந்த புகாரில் துளி கூட உண்மையில்லை.ரத்தம் கொடுத்ததால் எச்.ஐ.வி பாதிப்பு ஏற்படவில்லை.குழந்தைக்கு ரத்தம் கொடுத்தவரையும் சோதித்து விட்டோம். அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை. குழந்தைக்கு பல இடங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு இருக்கிறது. எச்.ஐ.வி பாதிப்பு ஏற்பட என்ன காரணம் என்பதை அறிய குழந்தையின் குடும்பத்தினர் ஒத்துழைத்தால் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.பாதிக்கப்பட்ட குழந்தைக்கு தனியார் மருத்துவமனை, அரசு மருத்துவமனை என எங்கு விரும்பினாலும் சிகிச்சை அளிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
முன்னதாக அமைச்சர்கள் வருகையை முன்னிட்டு அரசு மருத்துவமனை முன்பாக அதிமுகவினர் பட்டாசுகள் வெடித்தும் , மேள தாளமிட்டதும் மருத்துவமனைக்கு வந்திருந்த நோயாளிகளுக்கும், நோயாளிகளின் உறவினர்களுக்கும் இடையூறு ஏற்படுத்துவதாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.