February 15, 2019
தண்டோரா குழு
மயக்க மருந்து செலுத்தி பிடிக்கப்பட்ட சின்னதம்பி யானை 2 கும்கி யானைகள் உதவியுடன் லாரியில் ஏற்றப்பட்டுள்ளது.
கோவை தடாகம் வனப்பகுதியில் சுற்றித் திரிந்த சின்னத்தம்பி யானையை வனத்துறையினர் பிடித்து பொள்ளாச்சி டாப் ஸ்லிப் வனப்பகுதியில் விட்டனர். ஆனால் சின்னத்தம்பி யானை 100 கி.மீ. தூரம் நடந்தே வந்து மீண்டும் உடுமலைக்குள் நுழைந்தது. கண்ணாடிபுத்தூர் என்ற ஊரில் கடந்த சில நாட்களாக முகாமிட்டிருந்தது. எனினும் யாருக்கும் எவ்வித தொந்தரவையும் கொடுக்காமல் இருந்து வந்தது. இதனிடையே சின்னதம்பியை கும்கியாக மாற்றக் கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கிடையில், உடுமலை பகுதியில் சுற்றி வரும் சின்னத்தம்பி யானையை பிடிக்க வனத்துறையினருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது. மேலும் சின்னத்தம்பியை பிடிக்கும் போது துன்புறுத்தவோ, காயப்படுத்தவோ கூடாது என்று நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இதையடுத்து, சின்னதம்பியை பிடிக்கும் பணிகள் நேற்று மீண்டும் தொடங்கியது.இதையடுத்து, இன்று காலை 7 மணியளவில் கரும்பு தோப்பில் இருந்து வெளியே வந்த சின்னத்தம்பி யானைக்கு முதலில் ஊசியைக் மருத்துவர் அசோகன் செலுத்தினார். ஆனால் அது தவறியது. இரண்டாவது ஊசியைக் ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரி தங்கராஜ் பன்னீர்செல்வம் செலுத்தினார். அது யானையின் பின்னங்காலில் செலுத்தப்பட்டது. தங்கராஜ் செலுத்த முயன்ற மூன்றாவதும் தவறியது. பின்னர் ஐந்தாவது முறையாக செலுத்திய மயக்க ஊசி யானை மீதுபட்டது. எனினும், சின்னத்தம்பி மீண்டும் காட்டுக்குள் சென்று விட்டது.
சின்னத்தம்பி யானையை பிடிக்க கரும்பு காட்டுக்குள் கலீம் மற்றும் சுயம்பு ஆகிய இரு கும்கி யானைகள் உடன் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பின்னர், மயக்க மருந்து செலுத்தியும், 2 கும்கி யானைகள் உதவியுடனும் பிடிக்கப்பட்ட சின்னதம்பி யானை, வனத்துறையினர் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. இதனைத்தொடர்ந்து, மயக்க மருந்து செலுத்தி பிடிக்கப்பட்ட சின்னதம்பி யானை 2 கும்கி யானைகள் உதவியுடன் லாரியில் ஏற்றப்பட்டுள்ளது. இதையடுத்து யானையை வரகளியாறு முகாமில் விட வனத்துறையினை் திட்டமிட்டுள்ளனர்.