February 14, 2019
தண்டோரா குழு
தமிழ் புலவர் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளைக்கு கன்னியாகுமரியில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் சிலையுடன் கூடிய மணிமண்டபம் கட்டப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் இன்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி, 110 – விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். பல்வேறு தரப்பினரின் கோரிக்கைளை ஏற்று இந்த அறிவிப்புகள் வெளியிடப்படுவதாக தெரிவித்தார். அதன்படி, கவிமணி தேசிய விநாயகம் பிள்ளைக்கு கன்னியாகுமரியில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் சிலையுடன் கூடிய மணிமண்டபம் கட்டப்படும். அவரது சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டத்தில் தேரூரில் நூலகத்துடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என்றார்.
இதனை தொடந்து, பல்வேறு தலைவர்களுக்கு மணிமண்டபம் மற்றும் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்தார். அதில் இரட்டைமலை சீனிவாசனுக்கு மதுராந்தகத்தில் நூலகத்துடன் ஒரு கோடி ரூபாயில் மணிமண்டபம் அமைக்கப்படும். பேராசிரியர் முத்தரையருக்கு திருச்சியில் ஒரு கோடி மதிப்பில் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும். சர் ஏ.டி. பன்னீர்செல்வத்திற்கு திருச்சியில் 50 லட்சம் ரூபாய் மதிப்பில் மணிமண்டபம் அமைக்கப்படும். வி.கே.பழனிசாமிக்கு கோவையில் 1 கோடி ரூபாயில் நூலகத்துடன் கூடிய மணிமண்டபம். ஒண்டி வீரன், தீரன் சுந்தரலிங்கனார் ஆகியோரின் மணிமண்டபம் தலா ரூ.75 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்படும் என்றும் அறிவித்தார்.
மேலும், முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னி குவிக்கின் பிறந்த நாள் ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடப்படும். ம.போ. சிவஞானம், சி.பா. ஆதித்தனார், வீரன் அழகு முத்துகோன், காளிங்கனார் ஆகியோரின் பிறந்தநாளும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என பல்வேறு அறிவிப்புகளை அறிவித்தார்.