February 13, 2019
தண்டோரா குழு
கோவையை அடுத்த காரமடை பகுதியில் உள்ள அரங்கநாதர் கோயிலில் உள்ள நிர்வாகிகள் தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபடுவதாக கூறி இந்து அறநிலையத் துறை உதவி ஆணையாளர் வாகனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவையை அடுத்த காரமடை பகுதியில் பிரசித்தி பெற்ற அரங்கநாதர் கோயில் அமைந்து உள்ளது. இந்த கோயிலில் இந்த வருட தேர்த் திருவிழா வருகிற 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் அந்த கோயிலின் செயல் அலுவலர் பெரிய மருதுபாண்டியன் , கணக்காளர் மகேந்திரன் உள்ளிட்டோர் கோயில் நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகளை செய்வதாகவும், இதனால் தேர்த் திருவிழா முறையான வகையில் நடக்க வாய்ப்பில்லை எனக் கூறி அப்பகுதி பொதுமக்கள்
கோவையில் உள்ள இந்து அறநிலையத்துறை ஆணையாளருக்கு புகார் மனு அளிக்க வந்தனர்.
அப்போது அங்கு வந்த உதவி ஆணையாளரின் வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு பேச்சவார்த்தைக்கு பிறகு சமாதானம் அடைந்தனர். உடனடியாக முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், தேர்த் திருவிழா நடைபெறும் போது, சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளதாகவும் எனவே உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.