February 11, 2019
தண்டோரா குழு
சின்னத்தம்பி யானையை பிடித்து முகாமில் வைப்பதை தவிர வேறு வழியில்லை என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கோவை தடாகம் பகுதியில் சுற்றித்திரிந்த சின்னத்தம்பி காட்டுயானையை வனத்துறையினர் கடந்த 25-ம் தேதி மயக்க ஊசி செலுத்திப் பிடித்தனர். பின்னர் யானையின் கழுத்தில் ஜி.பி.எஸ். கருவி பொருத்திய வனத்துறையினர் பொள்ளாச்சி டாப்சிலிப் பகுதியில் உள்ள வரகளியாறு வனப்பகுதியில் விட்டனர். எனினும், மீண்டும் சின்னதம்பி யானை ஊருக்குள் திரும்பியது. இதற்கிடையில், யானையை கும்கியாக மாற்றப்படும் என கூறப்பட்டது. இதற்கிடையில், விலங்கு நல ஆர்வலர் அருண் பிரசன்னா என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மணிகுமார் மற்றும் சுப்பிரமணிய பிரசாத் அமர்வு, சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்றக்கூடாது எனவும், மேலும் அதனை துன்புறுத்தாமல் பத்திரமாக காட்டுக்குள் அனுப்பிவைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர். இதையடுத்து, உடுமலை பகுதிகளில் உள்ள அமராவதி சர்க்கரை ஆலை, கரும்பு பண்ணையில், கடந்த ஐந்து நாளாக முகாமிட்டிருந்த இந்த யானை, தற்போது செம்பழனிபுதூர் பகுதிக்கு இடம்பெயர்ந்தது. இதனால் சின்னத்தம்பி யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் அனுப்ப வனத்துறையினர் முயன்று வருகின்றனர்.
மேலும், சின்னதம்பி யானை நடமாட்டம் குறித்து அறிக்கை தர தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும் யானையின் நடமாட்டத்தை வரும் 10ம் தேதி வரை கண்காணித்து 11ம் தேதிக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், சின்னதம்பி யானை தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர்நீதிமன்றத்தில் வனத்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில் தலைமை வனப்பாதுகாவலர் தெரிவிக்கையில்,
‘சின்னத்தம்பி யானையை பிடித்து முகாமில் அடைப்பதை தவிர வேறு வழியில்லை, சின்னத்தம்பி யானையை மிகவும் சாதுவாக மாறிவிட்டதால் மீண்டும் அதனை காட்டுக்குள் திருப்பி அனுப்புவதில் சிரமம் உள்ளது, காட்டிற்குள் அனுப்ப முயற்சித்தும் யானை மீண்டும் ஊருக்குள் நுழைந்து விடுகிறது. வனத்துறை அதிகாரிகள் மற்றும் அதிகாரிகளின் கருத்தின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. யானைகள் நிபுணர் அளித்த அறிக்கையின் படி சின்னத்தம்பி யானையை முகாமில் வைத்து பாதுக்காக்க உள்ளோம் ‘ என தெரிவித்துள்ளார்.
சின்னத்தம்பி காட்டு யானை போல் செயல்படவில்லை என்பது செய்திகளை பார்க்கும் போது தெரிகிறது என்று கூறிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.