January 24, 2019
தண்டோரா குழு
கோவை கணுவாய் தடாகம் மெயின் ரோட்டில் இன்று காலை செங்கல் ஏற்றி வந்த லாரி மோதியதில் பைக்கில் வந்த 2 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கோவை தடாகம் பகுதியில் நூற்றுக்கணக்கான செங்கல் சூளைகள் உள்ளன. இந்த செங்கள் சூளைகளில் தென் மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் குடும்பத்துடன் வந்து தங்கி இருந்து வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று மதியம் தடாகம் பகுதியிலுள்ள தனியார் செங்கள் சூளையில் வேலை செய்யும் தஞ்சாவூர் உறையகுன்னம் பகுதியை சேர்ந்த மாதவன், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சதிஸ்குமார் ஆகியோர் டூவிலர் லோன் பணம் கட்டுவதற்காக கணுவாய் பகுதியிலுள்ள ஏ.டி.எம். செண்டரில் பணம் எடுக்க டூவிலரில் சென்றனர். டூவிலரை சதிஸ்குமார் ஓட்டியுள்ளார்.
அப்போது கணுவாய் சோமையனூர் மெயின்ரோட்டில் உள்ள நர்சரி அருகே முன்னாள் சென்று கொண்டு இருந்த லாரியை முந்த முயன்றுள்ளதாக தெரிகிறது. அப்போது எதிர்பாரதவிதமாக லாரி மற்றும் டூவிலர் மோதியதில் லாரி டயர் ஏறி டூவிலரை ஓட்டி வந்த இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இந்த தகவல் அறிந்ததும் தடாகம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த இருவரையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த இருவரையும் பார்த்து அவர்கள் உறவினர்கள் கதறி அழுதனர்.
இதற்குள் லாரியை ஓட்டிவந்த டிரைவர் தப்பி ஓடியதால் லாரியை மட்டும் போலீசார் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டபகலில் லாரி மோதி இரண்டு தொழிலாளர்கள் இறந்தது இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.