January 24, 2019
தண்டோரா குழு
அரசு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சூழலில், இந்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள ஆசிரியர்களுக்கு ஆதரவு தெரிவித்து கோவை அரசு கலை கல்லூரி மாணவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்றாவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் பேராசிரியர்கள் கலந்து கொண்டு உள்ளனர். இந்நிலையில் பேராசிரியர்களின் கோரிக்கை நியாயமானதாக உள்ளதாகவும், எனவே உடனடியாக அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, கோவையில் உள்ள அரசு கலை கல்லூரி மாணவர்கள் , கல்லூரி வாயிலின் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோரிக்கைகளை நிறைவேற்றாமல் இழுத்தடித்து வரும் அரசை கண்டித்து மாணவர்கள் கோஷங்களை எழுப்பினர். இந்த போராட்டத்தில் 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.