January 23, 2019
தண்டோரா குழு
ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் சார்பாக கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற மறியலில் 400 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களிம் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு சார்பாக இன்று இரண்டாவது நாள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனையொட்டி கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக 500 க்கும் மேற்பட்டோர் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டாம் நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் புறநகரில் 95 சதவிகித ஆசிரியர்களும், மாநகரில் 75 சதவிகித ஆசிரியர்களும் கலந்து கொண்டுள்ளதாகவும், 80 சதவிகிதம் அரசு ஊழியர்களும் இதில் பங்கேற்றுள்ளதாகவும் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.
இதனையடுத்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டவாரு சாலை மறியலில் ஈடுபட்டனர். இவர்களை தடுத்த காவல்துறையினர் தடையை மீறி மறியலில் ஈடுபட்ட 400 க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். கோவையில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு சார்பாக 8 இடங்களில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.