January 23, 2019
தண்டோரா குழு
இந்திய பொருளாதார வளர்ச்சியில், தமிழகத்தின் பங்கு 8.4 விழுக்காடு உள்ளதாக 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு நடத்தும், இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு, சென்னையில், இன்று(ஜன.,23) துவங்கியது. மாநாட்டை, சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்தார். ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன், சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இரண்டு நாட்கள் நடக்கும் மாநாட்டிற்காக, 73 கோடி ரூபாய் செலவில், தமிழக அரசு சிறப்பு ஏற்பாடுகள் செய்து உள்ளது.
இன்றும், நாளையும் நடைபெறும் மாநாட்டில் தென் கொரியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் முதலீட்டாளர்கள் பங்கேற்கின்றனர். தேசிய அளவில் பிரபல தொழில் நிறுவனங்களும் பங்கேற்கின்றன. மாநாட்டின் மூலம் ரூ.2.50 லட்சம் கோடி முதலீடுகள் தமிழகத்து வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்விழாவில் பேசிய முதல்வர் பழனிச்சாமி,
2015ஆம் ஆண்டு முதல் உலக முதலீட்டாளர் மாநாட்டை ஜெயலலிதா நடத்தினார். அது மிகப்பெரும் வெற்றிபெற்றது. முதல் உலக முதலீட்டாளர் மாநாட்டின்போது மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி, பல்வேறு தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. தமிழகம் முதலீடுகளை ஈர்ப்பதில் தொடர்ந்து முன்னோடியாக விளங்கி வருகிறது. தமிழகத்தில் வறுமை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது. ஆட்டோமொபைல், ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள், ஜவுளி உற்பத்தி துறைகளில் தமிழகம் சிறந்து விளங்குகிறது.
தொழில் நிறுவனங்களுக்கு 30 நாட்களில் ஒற்றைச்சாளர முறையில் அனுமதி வழங்கப்படுகிறது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் 8.5 சதவீதம் என்ற பங்கை தமிழகம் செலுத்துகிறது. ராணுவத்தளவாட உற்பத்தியிலும் தமிழகம் சிறந்து விளங்குகிறது. சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் தமிழகம் மிகச் சிறந்த நிலையில் இருக்கிறது. கடந்த 7 ஆண்டுகளில் மின்சாரத்தில் தமிழகம் தன்னிறைவு பெற்றுள்ளது. மின் தடையில்லா மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது.
7.2 கோடி மக்கள் தொகை கொண்ட தமிழகம், உற்பத்தித் துறையில் முதன்மையாக உள்ளது. வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் முன்னோடியாக விளங்குகிறது.
தமிழகத்தில் 38 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உள்ளன. பிரான்ஸ், பிரிட்டன், ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ளன. இதன்மூலம் மக்களின் கனவை, தமிழக அரசு நிறைவேற்றியுள்ளதாக முதல்வர் பழனிச்சாமி கூறினார்.
மேலும், வானூர்தி பூங்கா 200 ஏக்கரில் ஸ்ரீபெரும்புதூரில் அமைய உள்ளது. இது 700 ஏக்கருக்கு விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. பாதுகாப்புத்துறை சார்ந்து தொழில் துவங்க 85 நிறுவனங்கள் ஏற்கனவே ஒப்பந்தமாகி உள்ளன என கூறினார்.