January 21, 2019 தண்டோரா குழு
கொடநாடு விவகாரத்தில் தன்மீது குற்றம் இல்லை என நிரூபிக்க முதல்வர் பழனிசாமி நெருப்பில் கூட இறங்குவார் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் தொடந்து கொலை கொள்ளை சம்பவங்கள் நடந்தன மேலும் இதில் காவலாளியாக பணியாற்றி வந்த ஓம் பகதூர் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 24-ஆம் தேதி மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதூர் அரிவாளால் வெட்டப்பட்டு மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கோத்தகிரி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், இந்த வழக்கில் முதல் குற்றவாளியான கனகராஜ், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நடைபெற்ற விபத்தில் சிக்கி ஏப்ரல் 28-ஆம் தேதி உயிரிழந்தார். அதைபோல் இவரது கூட்டாளி சயன், தனது மனைவி வினுபிரியா, மகள் நீது ஆகியோருடன் ஏப்ரல் 29-ஆம் தேதி கேரளத்துக்கு காரில் சென்றபோது பாலக்காடு அருகே விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். இதில், வினுபிரியா, நீது ஆகியோர் உயிரிழந்தனர். காயமடைந்த சயன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த சூழலில், தெகல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் என்பவர் கொடநாடு காவலாளி உட்பட 5 பேர் கொலை மற்றும் கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொள்ளை தொடர்பாக ஆவணப்படம் வெளியிட்டுள்ளார். மேலும், முதல்வர் எடப்படி பழனிசாமி குறித்தும் அவர் குற்றஞ்சாட்டினார். எனினும், இதற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என முதல்வர் பழனிச்சாமி விளக்கமளித்தார்.
இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட திமுக தலைவர் ஸ்டாலின், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து கோரிக்கை விடுத்தார். இதுகுறித்து பதிலளித்த முதல்வர் பழனிசாமி, நேரடியாக எதிர்கொள்ள திராணியற்றவர்கள் குறுக்கு வழியை கையாண்டுள்ளனர் என தெரிவித்தார். இது தொடர்பாக அமைச்சர்கள் பலரும் தங்களது கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி,
“கொடநாடு விவகாரத்தில் திமுக பின்புலத்தில் உள்ளது தெளிவாக தெரிகிறது. இதில் குற்றம் இல்லை என நிரூபிக்க முதல்வர் பழனிசாமி நெருப்பில் கூட இறங்குவார்” என கூறியுள்ளார்.