January 19, 2019
தண்டோரா குழு
சபரிமலைக்கு செல்வதற்காக 2 பெண்கள் நிலக்கல் வரை சென்று போது போலீசாரால் திருப்பி அனுப்பப்பட்டனர்.
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என கடந்த சில மாதங்களுக்கு முன் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு கேரள மாநிலம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இதனால் சபரிமலைக்கு செல்ல முயன்ற பெண் பக்தர்கள், ஆண் பக்தர்களாலும், போராட்டக்காரர்களாலும் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இதற்கிடையில், கடந்த ஜனவரி 2-ம் தேதி கேரளாவை சேர்ந்த பிந்து, கனகதுர்கா ஆகிய இருவரும் சபரிமலை சென்று ஐயப்பனை வழிபட்டனர். இது பெரும் பரபரப்பை கிளப்பியது. மேலும் அவர்களுக்கு பல்வேறு தரப்பின் மூலம் மிரட்டல்கள் வருவதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் இதுவரை சபரிமலையில் 51 பெண்கள் வழிபட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ரேஷ்மா, ஷாலினா என்ற இரண்டு பெண்களும் சபரிமலைக்கு செல்ல முயன்றனர். ஒரு மாதத்திற்கு முன் அவர்கள் சபரிமலைக்கு செல்ல முற்பட்டபோது கோயிலுக்குள் செல்லாமல் திருப்பி அனுப்பப்பட்டனர். மீண்டும் இன்று அவர் சபரிமலை கோயிலுக்குள் செல்வதற்காக நிலக்கல் வரை சென்றனர். அப்போது பாதுகாப்பு கருதி காவல்துறையினரால் திருப்பி அனுப்பப்பட்டனர். அதனால் கோயிலுக்குள் செல்வதறகான இரண்டாவது முயற்சியும் தோல்வியில் முடிந்தது.