January 14, 2019
தண்டோரா குழு
அரசியலில் எதுவும் மாறலாம்; கூட்டணி தொடர்பாக விரைவில் நல்லது நடக்கும் என துணை முதல்வர் ஓபிஎஸ் கூறியுள்ளார்.
கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இந்நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
சக்தியற்ற எதிர்க்கட்சிகள் அரசின் மீது அவதூறு பரப்பி வருகிறார்கள். இத்தகைய குற்றச்சாட்டுகளை அரசு உரிய முறையில் எதிர்கொள்ளும். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் கூறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.கொடநாடு கொள்ளை விவகாரம் தொடர்பாக ஆதாரம் இருந்தால் அதை காவல்துறையிடம் தரலாம் என்றார்.
பழைய நண்பர்களை மோடி கூட்டணிக்கு அழைத்தது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ஓபிஸ், அரசியலில் எந்த நேரத்திலும் எதுவும் மாறலாம் என்றும், கூட்டணி தொடர்பாக விரைவில் நல்லது நடக்கும்.தேர்தல் நேரத்தில் எதுவும் நடக்கலாம். தேர்தல் அறிவிக்கப்பட்ட உடன் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.ஏற்கனவே 2004-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளது எனவும் கூறினார்.