January 11, 2019
தண்டோரா குழு
கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக கேரள எல்லையில் அமைக்கப்பட்டுள்ள சிவலிங்கம் உலகிலேயே மிக உயரமான சிவலிங்கம் என்ற பெருமையுடன் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டில் இடம்பெற்றுள்ளது.
தமிழக கேரளா எல்லைப் பகுதியான உதயம் குளம்கரையில் செங்கல் மஹேஸ்வர சிவபார்வதி கோயில் உள்ளது. இந்த கோவிலில் 111 அடியில் உலகிலேயே மிக உயரமான சிவலிங்கத்தை அமைக்கும் பணிகள் கடந்த 2012-ஆம் ஆண்டு தொடங்கியது. தற்போது இறுதிகட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் வரும் மகா சிவராத்திரி அன்று இந்த சிலையை திறக்க திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த சிவலிங்கம் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டில் உலகிலேயே மிக உயரமான சிவலிங்கம் என்ற இடத்தை பிடித்துள்ளது. இதற்கான சான்றிதழை அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஷாகுல்ஹமீது தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட பின் சான்றிதழை ஆலய நிர்வாகியிடம் ஒப்படைத்தனர். சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் இந்த சிவலிங்கத்தில், மொத்தம் எட்டு நிலைகள் உள்ளன.
சிவலிங்கத்தின் உள் பகுதியில் உள்ள எட்டு நிலைகளில் தியான மண்டபம், சாமி சிலைகள் ஆகியவை உள்ளன. எட்டாம் நிலையில் சிவன் பார்வதி சிலை உள்ளது. உலகிலேயே உயரமான சிவலிங்கம் என்ற பெருமையை தமிழக சிவலிங்கம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.