January 11, 2019
தண்டோரா குழு
காவல் நிலையம் முன்பு டிக்டாக் வீடியோ செய்து பதிவிட்ட 4 இளைஞர்கள் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமான செயலிகளில் ஒன்று டிக்டாக் செயலி. சினிமா, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் ஆடியோக்களை வைத்து வீடியோவாக செய்து பதிவிடுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை பலரும் பொழுதுப்போக்காக செய்து வருகின்றனர்.
இந்நிலையில், சிவகாசி மாவட்டம் துலுக்கப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஈஸ்வரன், தங்கேஸ்வரம், முருகேஷன், குருமதன் அகிய 4 இளைஞர்கள் பசுபதி பாண்டியன் நினைவு தினத்திற்கு வாகனத்தில் செல்ல அனுமதி கேட்டு சிவகாசி கிழக்கு காவல் நிலையத்திற்கு சென்றுள்ளனர். அப்போது நடிகர் கார்த்திக் நடித்த சிறுத்தை படத்தில் ஒரு காட்சியில் அவர் காவலர் சீருடையில் வில்லன் வீட்டுக்குள் நுழையும் போது, இந்த வீட்டுக்கெல்லாம் இடது கால் வச்சுதான் உள்ளே போகனும்’ என்ற வசனத்தை இளைஞர்கள் காவல் நிலையத்தின் முன்பு டிக் டாக் செயலி மூலம் வீடியோவாக செய்து பதிவிட்டுள்ளனர்.
இதை வீடியோ கிழக்கு காவல் நிலைய காவல்துறையினரின் பார்வைக்கு கிடைக்க டிக்டாக் வீடியோ செய்த அந்த 4 இளைஞர்களை கைது செய்து அவர்கள் மீது தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், காவல்துறையை அவமதித்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் வீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
நாளுக்கு நாள் டிக்டாக் மோகம் இளைய தலைமுறையினர் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில் இளைஞர்கள் மீது காவல்துறையினர் எடுத்துள்ள இந்த நடவடிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இது டிக்டாகில் வரம்பு மீறி வீடியோ பதிவிட்டு வருபவர்களுக்கு காவல்துறை தரப்பிலிருந்து விடுக்கப்படும் எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.