January 11, 2019
தண்டோரா குழு
பணமதிப்பு நீக்கத்துக்குப் பின் அறிமுகம் செய்யப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதை மத்திய அரசு நிறுத்திவிட்டதாக வெளியான தகவல் குறித்து பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் விளக்கமளித்துள்ளார்.
2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி அப்போது புழக்கத்தில் இருந்த 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை பிரதமர் நரேந்திர மோடி மதிப்பு நீக்கம் செய்வதாக அறிவித்தார். இதையடுத்து 1000 மற்றும் 500 ரூபாய் மதிப்பிழந்த ரூபாய் நோட்டுகளுக்கு மாற்றாக புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் மத்திய அரசு அறிமுகம் செய்தது. அப்போது நாட்டில் புழக்கத்தில் இருந்த பணத்தின் மொத்த மதிப்பு ரூ.7.8 லட்சம் கோடியாக குறைந்து இதுவரை இல்லாத அளவுக்கு வரலாறு காணாத சில்லறைத் தட்டுப்பாடும் ஏற்பட்டது. அதன் பின்பு 2018 ஆண்டில் புதிய 10, 50, 100, 200 ரூபாய் நோட்டுகளும் நாட்டில் புழகத்தில் வந்தது.
இந்நிலையில் பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு அறிமுகம் செய்யப்பட்ட புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் எவ்வளவு அச்சிடப்பட்டது என்ற தகவலைத் தெரிவிக்குமாறு ரிசர்வ் வங்கிக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் 2000 ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதை மத்திய அரசு நிறுத்தி விட்டது என கடந்த வியாழக்கிழமையன்று தகவல் வெளியானது. வெளியான இரண்டு ஆண்டுகளில் இந்தியாவின் உயர்மதிப்புள்ள ரூபாய் நோட்டான 2000 ரூபாய் அச்சிடுவதை நிறுத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இச்சூழலில் இந்த விவகாரம் குறித்து மத்திய பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் விளக்கம் அளித்துள்ளார்
“2,000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 35% க்கு மேல் 2,000 ரூபாய் நோட்டுகள் தான் புழகத்தில் உள்ளது. மேலும் 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பது குறித்து அண்மையில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.” என்றார்.
அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பு நீக்கம் இரண்டும் இந்திய பொருளாதாரத்தின் மீது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது என்று கூறினார்.