January 11, 2019
தண்டோரா குழு
திட்டமிட்டபடி வரும் 22ம் தேதி முதல் ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெறும் என்றும் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர்.
இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்குதல், முதுநிலை ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்கள், கண்காணிப்பாளர்கள், தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு ஊழியர்கள், பணியாளர்கள் பல்வேறு துறைகளில் உள்ள தொழில் நுட்ப ஊழியர்கள், ஊர்து ஓட்டுநர்கள் ஆகியோருக்கான ஊதிய முரண்பாடுகளை களைதல், உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கடந்த சில ஆண்டுகளாக ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஜாக்டோ-ஜியோ டிசம்பர் 4-ம் தேதி காலவரையற்ற தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்குவதாக இருந்தது. இதற்கிடையில், ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்துள்ள வேலைநிறுத்த போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டது.அப்போது, போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக ஜாக்டோ ஜியோ சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் கால அவகாசம் கேட்டு தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. இதனையடுத்து, வேலைநிறுத்தம் செய்ய மாட்டோம் என்ற உறுதிமொழியை நீதிமன்றத்திலிருந்து ஜாக்டோ ஜியோ திரும்பப் பெற்றது. மேலும் திட்டமிட்டபடி வரும் 22ம் தேதி முதல் ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெறும் என்றும் எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற அரசுத்தரப்பு அவகாசம் மட்டுமே கோருகிறது என்றும் ஜாக்டோ – ஜியோ அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து,வழக்கை ஜன.28க்கு உயர்நீதிமன்ற கிளை ஒத்திவைத்தது.