January 11, 2019
தண்டோரா குழு
சென்னை உயர்நீதிமன்றம் சர்க்கரை ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு ஆயிரம் ரூபாய் வழங்க அனுமதி அளித்துள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.1000 பரிசுத்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 5ம் தேதி தொடங்கி வைத்தார். ரூ.258 கோடி ரூபாயில் 2.02 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த பரிசுத்தொகுப்பு வழங்கப்படவுள்ளது.
இதற்கிடையில், இத்திட்டத்திற்கு தடை கோரி கோவையை சேர்ந்த சமூக ஆர்வலர் டேனியல் ராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இம்மனு இன்று நீதிபதிகள் சத்யநாராயனன், ராஜமாணிக்கம் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இம்மனுவை விசாரித்த நீதிபதிகள், பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்க வேண்டியதன் நோக்கம் என்ன? பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்களுக்கு மட்டும் கொடுக்காமல் ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் பொங்கல் பரிசு கொடுப்பதேன் ? பொங்கல் பரிசு என்ற பெயரில் வாரி வழங்கப்படும் பணம் கட்சிப்பணமா? என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினர்.
மேலும்,வறுமை கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ.1000 பொங்கல் பரிசு வழங்க கூடாது. வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவரக்ளுக்கு மட்டுமே பொங்கல் பரிசு தர வேண்டும் உத்திரவிட்டிருந்தது. இந்த உத்தரவை மாற்றி அமைக்க கோரி தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், ‘உயர்நீதிமன்றம் விதித்த தடை உத்தரவினால், சர்க்கரை மட்டும் வாங்கும் ரேசன் அட்டைதாரர்களுக்கும், எந்த பொருளும் வாங்காத ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ரொக்கம் பரிசு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களும் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் என்பதால், பொங்கல் பரிசான ரூ.1000அவர்களுக்கும் வழங்க அனுமதிக்க வேண்டும். மேலும் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மாற்றியமையக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.
இம்மனு மீதானா விசாரணையை இன்று எடுத்துக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், சர்க்கரை ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு ஆயிரம் வழங்க அனுமதி அளித்துள்ளது. மேலும், இலவசங்களை அனைவருக்கும் வழங்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.