January 10, 2019
தண்டோரா குழு
ஜிஎஸ்டிவரி செலுத்துவதற்கான ஆண்டு வர்த்தக வரம்பு ரூ.20 லட்சத்திலிருந்து ரூ.40 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 32வது கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் குழுவில் இடம்பெற்றுள்ள மாநில நிதி அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான ஜிஎஸ்டி வரி விலக்கு வரம்பை உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார்,
கைத்தறி பொருட்கள், ஜவ்வரிசி, தீப்பெட்டி, வெட் கிரைண்டர் உள்ளிட்டவற்றின் மீதான வரி விகிதத்தை குறைக்க வலியுறுத்தினார்.மேலும், பம்பு செட்டுகள், வணிக சின்னமிடப்படாத நொறுக்கு தீனிகள், குளிர்பானங்கள், பிஸ்கட்டுகள், இயற்கை மற்றும் செயற்கை உரங்கள், கற்பூரம், காகிதப் பொருட்கள், மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் உள்ளிட்டவற்றிற்கு வரி விலக்கு அளிக்குமாறு ஜெயக்குமார் கேட்டுக்கொண்டார்.
அதைப்போல் இக்கூட்டத்தில் சிறு, குறு நிறுவனங்களுக்கான வரி விலக்கு உச்சவரம்பை தற்போதுள்ள 20 லட்சம் ரூபாயில் இருந்து 40 லட்சம் ரூபாயாக அதிகரிப்பது குறித்து முடிவு எடுக்கப்பட்டது. இது தவிர அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான ஜிஎஸ்டியை 12%-ல் இருந்து 5% ஆக குறைப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இக்கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை அருண் ஜெட்லீ,
ஜிஎஸ்டி தொகுப்பு சலுகை (காம்போசிஷன் ஸ்கீம்)பெறுவதற்கான வரம்பு ரூ.1கோடியிலிருந்து ரூ.1.5 கோடியாக உயர்கிறது. ஜிஎஸ்டிவரி செலுத்துவதற்கான ஆண்டு வர்த்தக வரம்பு ரூ.20 லட்சத்திலிருந்து ரூ.40 லட்சமாக அதிகரிக்கப்பட்டது. இது வரும் ஏப்.,1 முதல் அமலுக்கு வருகிறது.
இந்த சலுகை திட்டத்தின் கீழ் வருபவர்கள், வரியை, காலாண்டிற்கு ஒரு முறை வரி செலுத்த வேண்டும். ஆனால், ஆண்டிற்கு ஒரு கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். சேவை துறையினருக்கும் இந்த திட்டத்தை அமல்படுத்த கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது. தொகுப்பு சலுகைக்கான பலன்கள், சேவை துறையினருக்கும் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக கடந்த டிசம்பர் 23ம் தேதி நடைபெற்ற ஜிஎஸ்டி கூட்டத்தில் 23 பொருட்களுக்கு ஜிஎஸ்டி குறைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.