January 10, 2019
தண்டோரா குழு
கோவை ரத்தினபுரி பகுதியில் உள்ள நியாய விலை கடைகள் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு பொருட்கள் வழங்க தாமதித்ததால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் அங்கு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசின் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகையாக 1,000 ரூபாய் உடன் பச்சரிசி,கரும்பு,சர்க்கரை உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பு கடந்த 2 தினங்களாக அனைத்து நியாயவிலைக் கடை களிலும் வழங்கப்படுகிறது. இதனிடையே நேற்றைய தினம் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் பொங்கல் பரிசு தொகை வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து குறிப்பிட்ட சில எண் கொண்ட குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசுகள் வழங்கப்படுவது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கோவை ரத்தினபுரி சின்னசாமி வீதி பகுதியில் உள்ள ஐந்து ரேஷன் கடைகள் கொண்ட வளாகத்தில் காலை முதல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டனர். ஏற்கனவே ஒரு நாளைக்கு சராசரியாக 250 முதல் 300 குடும்பங்களுக்கு மட்டும் பொங்கல் பரிசுத் தொகையுடன் கூடிய பொருட்கள் வழங்குவதாக திட்டமிட்டிருந்த நிலையில் இன்று ஏராளமானோர் திரண்டதால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டம் அதிகரித்துக்கொண்டே இருந்ததை அடுத்து கடை நிர்வாகிகள் கடையின் ஷட்டரை அடைத்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அங்கு வந்த கோவை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி ஆர் ஜி அருண்குமார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அனைவருக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் எனவும் தினசரி 250 முதல் 300 பேருக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்பட்டு எந்த ஒரு குடும்ப அட்டையும் விடுபடாத வகையில் அனைவருக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என உறுதியளித்ததின் பேரில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு வரிசையில் நின்று பரிசு தொகுப்பை பெற்றுச் சென்றனர்.
இதன் காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு நிலவியது.மேலும் அங்கு காவல்துறையினர் பாதுகாப்பு மற்றும் பொதுமக்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் சிவானந்தா காலனி பகுதியிலுள்ள அமுதம் பல்பொருள் அங்காடியிலும் பொங்கல் பரிசு வழங்கவில்லை என கூறி பொதுமக்கள் கடை நிர்வாகியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.