January 10, 2019
தண்டோரா குழு
காட்பாடி கிழிஞ்சூரில் விஸ்வாசம் படம் பார்க்க பணம் தராததால் தந்தையை மகன் எரித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் விஸ்வாசம். இதனால் நடிகர் அஜித்குமார் தரப்பு ரசிகர்கள் அனைத்து திரையரங்குகள் முன்பும் பட்டாசுகளை வெடித்து, ஆட்டம் பாட்டம் என கொண்டாடி வருகிறார்கள். இந்த படத்தின் சிறப்பு காட்சிகளை காண நள்ளிரவு முதலே ரசிகர்கள் தியேட்டர்கள் முன் கூடிவிட்டனர். இதே நாளில் ரஜினியின் பேட்ட படமும் வெளியாகியுள்ளது. இதனால் திரையரங்குகள் மேலும் களைகட்டியுள்ளது.
இந்நிலையில், வேலூர் மாவட்ட கட்டப்பாடி அருகே கிழஞ்சூரில் ஒரு தியேட்டரில் விஸ்வாசம் படம் திரையிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், பாண்டியன் என்பவரது மகன் அஜித் குமார். இவர் தீவிர அஜித் ரசிகர். முதல் நாள், முதல் ஷோ பார்க்கும் பல ரசிகர்களில் இவரும் ஒருவர்.
ஆனால், படம் பார்க்க பாண்டியன் காசு கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த மகன் பாண்டியன் தூங்கிக் கொண்டிருக்கும் போது அவரது முகத்தில் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார்.
அப்போது பாண்டியனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் தீக்காயங்களுடன் பாண்டியனை அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.