January 4, 2019
தண்டோரா குழு
கோவையில் மாநகராட்சியில் கடந்த நான்கு நாட்களில் 1759.5 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
ஜனவரி 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை அமல் படுத்தியதை தொடர்ந்து,தடை செய்யப்பட்ட 14 வகை பிளாஸ்டிக் பொருட்களையும் அறிவித்து, விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில் ஜனவரி 1 ஆம் தேதி முதல் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகள் கோவை மாவட்டம் முழுவதும் பிளாஸ்டிக் விற்பனை மற்றும் இதர கடைகளில் சோதனை மேற்கொண்டு, தடைவிதிக்கப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்து வருகின்றனர். அந்த வகையில் கோயம்புத்தூர் மாநகராட்சியில் மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி அலுவலர்கள் கடைகளில் சோதனைகள் மேற்கொண்டனர். இதில், 1759.5 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,
01.01.2019 முதல் 04.01.2019 வரை வடக்கு மண்டலத்தில் 463 கடைகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டு, தடைசெய்யப்பட்ட 215 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.1,58,000 மதிப்பில் அபராதமும், தெற்கு மண்டலத்தில் 532 கடைகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டு, தடைசெய்யப்பட்ட 301.5 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.13,200 மதிப்பில் அபராதமும், கிழக்கு மண்டலத்தில் 354 கடைகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டு, தடைசெய்யப்பட்ட 239 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.18,500 மதிப்பில் அபராதமும், மேற்கு மண்டலத்தில் 673 கடைகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டு, தடைசெய்யப்பட்ட 649 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.18,350 மதிப்பில் அபராதமும், மத்திய மண்டலத்தில் 167 கடைகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டு, தடைசெய்யப்பட்ட 355 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.22,360 மதிப்பில் அபராதமும், அனைத்து மண்டலங்களிலும் ஆகமொத்தம் 2189 கடைகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 1759.5 கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ.2 இலட்சத்து 30 ஆயிரத்து 410 மதிப்பில் அபராதம் விதித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.