January 3, 2019
தண்டோரா குழு
தமிழக சட்டப்பேரவையில் கருணாநிதியை நினைவுகூர்ந்து பேசும் திமுக பொருளாளர் துறைமுருகன் கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
தமிழக சட்டப்பேரவை நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. சட்டப்பேரவை 8ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், இன்றைய தினம் மறைந்த தமிழக முதல்வர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, சட்டப்பேரவையின் 2வது நாள் கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் இன்று தொடங்கியது. இதில், மறைந்த 12 அவை உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் கூட்டத்தில் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கருணாநிதி குறித்த இரங்கல் தீர்மானம் மீது திமுக பொருளாளர் துரைமுருகன் பேசும்போது,
என்னை இந்த மன்றத்தில் பேச அழைக்கும் போதெல்லாம் உணர்ச்சியோடு, எழுச்சியோடு எழுந்து நிற்பேன். ஆனால் இன்று கலைஞருக்காக இரங்கல் தீர்மானத்தில் பேச அழைத்த போது உடல் தளர்ந்து உள்ளம் சோர்ந்து துவண்ட நிலையில் இருக்கிறேன். 95 ஆண்டு காலம் வாழ்ந்தவர் கலைஞர். . தான் வாழ்ந்த நாளில் பாதி நாட்களுக்கு மேல் இந்த அவையில் அமர்ந்து பணியாற்றியவர். 13 தேர்தல்களில் நின்று வென்றவர். எதிர்க்கட்சி தலைவர், அமைச்சர், முதல்- அமைச்சர் என 56 ஆண்டு காலம் சட்டமன்றத்தில் பணியாற்றியவர். முதல்- அமைச்சராக 6863 நாட்கள் அதாவது 9 ஆண்டுகள் பணியாற்றினார். 17 ஆயிரத்து 908 நாட்கள் தி.மு.க. கட்சித் தலைவராக செயல்பட்டார். தமிழுக்காக, தமிழ் நாட்டுக்காக, தமிழ் மக்களுக்காக உழைத்து விட்டு அண்ணாவின் பக்கத்திலே ஓய்வெடுக்கிறார் கலைஞர். எந்நாளும் தமிழர் மனங்களில் இருப்பவர் கலைஞர்.
எனக்கு இருதய அறுவை சிகிச்சை நடந்தபோது 2-வது முறையாக உயிர் கொடுத்தவர். ‘நான் 2007-ல் மடிந்திருந்தால் என் உடல் மீது கலைஞரின் கண்ணீர் விழுந்திருக்கும். எனக்கு இரண்டாவது உயிரை கொடுத்தவர் கலைஞர் கருணாநிதி. தனது பிள்ளைகளை விட எனக்கு அதிக உரிமை தந்தவர் கலைஞர்.என் மரணத்திற்குக் கலைஞர் கண்ணீர் விடுவார் என நினைத்தேன். ஆனால் அவர் மரணத்திற்கு நான் கண்ணீர் விட வேண்டிய நிலை வந்துவிட்டது. எந்நாளும் தமிழர் மனங்களில் அவர் இருப்பார்’ என்று உருக்கமாகக் கண்ணீர் மல்க பேசினார். ஒரு கட்டத்தில் பேச்சை நிறுத்தி அமர்ந்து கதறி அழுதார். அப்போது அவருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.