January 2, 2019
தண்டோரா குழு
ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.
கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சுற்றியுள்ள மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் கடந்த மே 22-ந்தேதி வன்முறையாக வெடித்தது. இதனை தொடர்ந்து போலீசார் வன்முறையை கட்டுப்படுத்த நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தில் பொதுமக்களில் 13 பேர் பலியாகினர். கடும் எதிர்ப்பை தொடர்ந்து தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவின் பேரில் வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. இதனை எதிர்த்து வேதாந்தா குழுமம் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கு, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடைபெற்றது. இதற்கிடையில், தூத்துக்குடியில் அமைக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மூடியது இயற்கை நீதிக்கு எதிரானது ஆலையை திறக்கலாம் என்று மேகாலயா மாநிலத்தின் முன்னாள் தலைமை நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான உண்மை கண்டறியும் குழு, தேசிய பசுமைத்தீர்ப்பாயத்தின் தலைமை அமர்வில் அறிக்கை அளித்தது.
இதை தமிழக அரசு எதிர்த்தது. இது தொடர்பான வழக்கில்,, ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு வழங்கியது. தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் புதிய வழிமுறைகளை அளிக்கவேண்டும், ஆலையை திறப்பதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆட்சியார் செய்து தரவேண்டும், பாதுகாப்பு அளிக்காவிட்டால் மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ஆலைக்கு தேவையான மின்சார வசதியை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடியில் காற்று மாசு அடைவதற்கு ஆதாரம் இல்லை என திட்டவட்டமாக தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தேசிய பசுமை தீர்பாயம் ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதி அளித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சார்பில் ஏற்கனவே கேவியட் மனு தாக்கால் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.