December 27, 2018
தண்டோரா குழு
முத்தலாக் சட்டம் இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல; ஆண்டவனுக்கே எதிரானது என அதிமுக எம்.பி. அன்வர் ராஜா மக்களவையில் ஆவேசமாக பேசியுள்ளார்.
முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) சட்டம்-2018 ஏற்கனவே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டத்தின் படி ‘முத்தலாக்’
முறையில் மனைவியை விவாகரத்து செய்வது சட்டவிரோதம் என்றும், இதன்மூலம் கணவருக்கு 3 வருடங்கள் ஜெயில் தண்டனை விதிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதில் மத்திய அரசு, விவாகரத்து செய்யும் கணவர்களுக்கு ஜாமீன் வழங்குவது உள்பட சில திருத்தங்களை செய்தது. எனினும் மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றப்படவில்லை. இதனால் கடந்த செப்டம்பர் மாதம் இதற்காக சில திருத்தங்களையும் சேர்த்து ஒரு அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
இதற்கிடையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியதும் முத்தலாக் அவசர சட்ட மசோதாவை சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தாக்கல் செய்தார் செய்தார். இதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது. இதற்கிடையில், இன்று மக்களவை கூடியதும் முத்தலாக் மசோதா விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. முத்தலாக் தடை மசோதாவை நாடாளுமன்ற சிறப்பு குழுவுக்கு அனுப்ப எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன. தற்போதைய நிலையில் மசோதாவை நிறைவேற்ற காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. முத்தலாக் மசோதா மீது மக்களவையில் காரசார விவாதம் நடைபெற்று வருகிறது.
முத்தலாக் விவாதம் குறித்து அ.தி.மு.க எம்பி. அன்வர் ராஜா பேசுகையில்,
தற்போதைய நிலையில் முத்தலாக் மசோதா சட்டவிரோதமானது. உணர்ச்சிகரமான விஷயத்தில் மத்திய அரசு கண்மூடித்தனமாக செயல்படுகிறது. கண்துடைப்புக்காகவே இந்த மசோதாவை மத்திய அரசு கொண்டுவந்து உள்ளது. நீங்கள் இந்த விஷயத்தில் தெரிந்தே தவறு செய்தீர்களானால் வருந்தியே ஆக வேண்டும். மசோதாவில் சில மாற்றங்களை செய்ய வேண்டும். மசோதாவில், ஷரியத் சட்டத்திற்கு எதிராக சில பிரிவுகள் உள்ளது. முஸ்லிம் ஆண்களை மட்டும் குறிவைப்பது ஏன்? விவாகரத்தானது முஸ்லிம் மதத்தில் மட்டும் நடக்கவில்லை. மற்ற மதங்களிலும் நடக்கிறது. அங்கெல்லாம், இதனை குற்ற செயலாக பார்ப்பது கிடையாது. இந்தியாவில் முஸ்லீம்கள் பின்தங்கி இருப்பதற்கு முத்தலாக் காரணம் என கூற முடியுமா? அரசியலமைப்பு சட்டம் கொடுத்துள்ள அடிப்படை உரிமைகள் இந்த மசோதாவால் பாதிக்கப்படும். இந்த மசோதாவை நிராகரிக்க வேண்டுமென்று விரும்புகிறேன். ஷரியத் சட்டம் மனிதர் உருவாக்கியது அல்ல. இறைவனால் அனுப்பப்பட்டது. முத்தலாக் சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல, இறைவனுக்கு எதிரானது. முத்தலாக் சட்டம் காட்டுமிராண்டித்தனமாக இருக்கிறது. மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டுகிறேன்.
ரூபாய் நோட்டு வாபஸ் காரணமாக கிராமங்களில் ஆதரவை இழந்தீர்கள். ஜிஎஸ்டி காரணமாக நகரங்களில் ஆதரவை இழந்தீர்கள். சமீபத்தில் தோல்வியை தழுவினீர்கள். இறைவனால் உருவாக்கப்பட்டு 1400 ஆண்டுகளாக திருத்தம் இல்லாமல் இருக்கும் இந்த சட்டம் இறைவனுக்கு எதிராக கொண்டு வருகிறீர்கள். தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது. முத்தலாக் மசோதா அரசியலமைப்புக்கு விரோதமானது. 3 ஆண்டு சிறை என்பதும் நியாயமற்றது. முத்தலாக் தடை மசோதாவே தேவை இல்லை. முஸ்லீம் தனி நபர் சட்டத்தில் முத்தலாக் மசோதா நேரடியாக தலையிடுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.