December 27, 2018
தண்டோரா குழு
கோவையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக 14 வது மாவட்ட மாநாட்டில் பல்வேறு விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளதாக மாநாட்டு குழு தலைவர் சு.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கோவையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 14 வது மாநாடு வரும் 29 ந்தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு கோவையில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இதில் மாநாட்டு குழு தலைவரும்,தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவருமான சு.பழனிசாமி
செய்தியாளர்களிடம் பேசுகையில்,
கோவை மாவட்ட அளவில் நடைபெறும் இந்த மாநாட்டில் பல்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளதாகவும், இதில் விவசாயிகள் நலனை காக்கும் விதமாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்ற பட உள்ளதாகவும் கூறினார். மேலும்,தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் உள்ள விவசாய கடன்கள் அனைத்தையும் முழுமையாக தள்ளுபடி வேண்டும். விவசாயிகள் விளைபொருள் விலை நிர்ணயத்தில் முனைவர் எம்.எஸ் சுவாமிநாதன் பரிந்துரையை அமுல்படுத்திட வேண்டும். விவசாயிகளுக்கு வயது முதிர்வின் போது மாதம் ரூ .5000 பென்சன் வழங்கப்பட வேண்டும். மத்திய மாநில அரசுகள் விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் உருவாக்க வேண்டும்.
கோவையில் தென்னை, பாக்கு விளை பொருள் ஏற்றுமதி மையம் உருவாக்கப்பட வேண்டும். பாரம்பரிய பயிர் வகைகளை ஊக்குவிப்பதுடன் இயற்கை வேளாண்மையை பாதுகாக்க வேண்டும். அரசு திட்டங்கள் நிறைவேற்றும் போது விவசாய நிலங்கள் , குடியிருப்புகள், தொழிற்சாலைகள் போன்றவைகள் பாதிக்காத வகையில் திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். வனவிலங்குகள் வாழும் இடங்களிலுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும். வன விலங்குகள் மூலம் ஏற்படுகிற உயிர் சேதம், பயிர் சேதம் குறித்து ஆய்வு செய்து உடனடியாக கேரள அரசை போல் இருமடங்கு இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்ற பட உள்ளதாக தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் போது தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகிகள் பெரியசாமி,பாலகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.