December 27, 2018
தண்டோரா குழு
வீரகேரளத்திலுள்ள சுடுகாட்டில் , புதைத்த ஆண் சடலத்தை வெளியே போட்டு விட்டு வேறு சடலத்தை புதைத்து சென்றதால் , தூர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் காவல் துறையிடம் புகார்
கோவை தொண்டாமுத்தூர் ரோடு வீரகேரளம் பகுதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான 3 ஏக்கர் சுடுகாடு உள்ளது. மாநகராட்சிக்கு உட்பட்ட வீரகேரளம் , நாகராஜபுரம் , நம்பியழகன் பாளையம் உள்ளிட்ட பகுதியைச்சேர்ந்தவர்கள் இறந்தால் இந்த சுடுகாட்டில்தான் உடலை அடக்கம் செய்து வந்தனர். தற்போது பராமரிப்பு இன்றி முற்புதர்களாக புதர் மண்டி கிடக்கிறது. மேலும் அருகில் மின்மயானம் இயங்கி வருவதால், உடலை புதைக்காமல் 95 சதவிகிதமானவர்கள் எரித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த சுடுகாட்டில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இறந்தவரின் உடலை புதைத்து உள்ளனர். அப்போது குழி தோண்டும் போது ஏற்கனவே புதைத்து 10 நாட்களேயான ஆண் சடலம் இருந்து உள்ளது. அதை வெளியே எடுத்து அப்படியே போட்டு விட்டு சென்று உள்ளனர். அதனால் அப்பகுதியே துர்நாற்றம் வீசியுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் வடவெள்ளி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் கடைசியாக இப்பகுதியில் இறந்தவர் யார் , இப்பகுதியை சேர்ந்தவரா அல்லது வேறு பகுதியை சேர்ந்தவரா, அவசர கதியில் பிணத்தை புதைத்து சென்று உள்ளனரா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதைத்து உடலை வெளியே போட்டு விட்டு , வேறு உடலை புதைத்து சென்றவர்கள் மீது நடவடிக்கை காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.