December 26, 2018
தண்டோரா குழு
குஜராத் மாநிலத்தை சேர்ந்த 16 வயது இளம்பெண் 170 செ.மீ. நீளத்திற்கு தலை முடி வளர்த்து 2019-ம் ஆண்டுக்கான கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
குஜராத் மாநிலம் மோடசா பகுதியைச் சேர்ந்த 16 வயது இளம்பெண் நிலன்ஷி படேல். இவர் பிளஸ்-1 படித்து வருகிறார். பெற்றோருக்கு ஒரே மகளாக உள்ள நிலன்ஷி படேல் தனது தலைமுடியை நீளமாக வளர்ப்பதில் சிறுவயதில் இருந்தே ஆர்வமுடன் இருந்துள்ளார். இதனால், தற்போது நிலன்ஷி படேல் தலைமுடி (170.5 சென்டி மீட்டர்) 5 அடி 7 அங்கலமாக உள்ளது. இதன் மூலம், 170 செ.மீட்டர் நீளமுள்ள தலைமுடியை வளர்த்து இருப்பதால் நிலன்ஷி புதிய சாதனையை படைத்து உள்ளார். அவரது இந்த சாதனை 2019-ம் ஆண்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இதற்காக சமீபத்தில் நிலன்ஷி இத்தாலி சென்று அங்கீகார கடிதத்தை பெற்று வந்தார்.
இதுகுறித்து நிலன்ஷி கூறுகையில்,
பத்து ஆண்டுகளுக்கு முன்னர் நான் பாப் கட் செய்திருந்தேன்.ஒருகட்டத்தில் எனக்கே அது பிடிக்காமல் போனது. இதனால் என் பெற்றோரிடம் இனிமேல் நான் தலைமுடியை வெட்ட போவதில்லை என கூறினேன். அது நாள் முதல் இன்று வரை நான் எனது தலைமுடியை வெட்ட வில்லை. அதன் பரிசாக தற்போது உலக சாதனை சான்றிதழை ஏந்தி நிற்கின்றேன். நீண்ட முடியை பராமரிப்பதில் எந்த பிரச்சனையும் எழவில்லை, என் தாய் மற்றும் சகோதரன் எனது தலைமுடியினை பராமரிக்க பெரிதும் உதவினர். வாரம் ஒருமுறை எனது தலைமுடியினை அலக்குவேன், சுமார் ஒரு மணி நேரம் கொண்டு உலர விடுவேன், பின்னர் கூந்தலை பின்னி முடிய குறைந்தது அரை மணி நேரம் தேவைப்படும் எனக் கூறியுள்ளார்.
இதற்கு முன்பு அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த ஏபிரில் என்ற பெண்ணின் 152.5 சென்டி மீட்டர் நீளமுள்ள தலைமுடிதான் சாதனையாக இருந்தது. அவரது சாதனையை கெயிட்டோ என்ற பெண் 155.5 சென்டி மீட்டர் நீள தலைமுடி வளர்த்து முறியடித்தார். தற்போது இந்த இருவரது சாதனைகளையும் குஜராத் பெண் நிலன்ஷி படேல் முறியடித்து புதிய உலக சாதனை படைத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.