December 26, 2018
சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு ஹச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட சம்பவம் குறித்து விசாரிக்க உயர்மட்ட தொழில்நுட்ப குழு அமைக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியைச் சேர்ந்த கர்பிணி பெண் ஒருவர் சாத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது அவருக்கு ரத்தசோகை இருப்பது தெரியவந்து டாக்டர்கள் அவருக்கு ரத்தம் ஏற்றவேண்டும் என்று அறிவுறுத்தினர். இதையடுத்து, 2 வாரங்களுக்கு முன்பு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள ரத்த வங்கியில் இருந்து ரத்தம் தானமாக பெறப்பட்டு கர்ப்பிணிக்கு செலுத்தப்பட்டது.
இதற்கிடையில், அவருக்கு உடல்நிலை மோசமடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பெண் அதே தனியார் ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். அப்போது அவருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டதில் எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பது தெரியவந்தது. விசாரணையில் கர்ப்பிணி பெண்ணுக்கு செலுத்தப்பட்ட ரத்தத்தில் எச்.ஐ.வி. பாதிப்பு இருந்ததே இதற்கு காரணம் என தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து, அரசு மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியத்தால் ஹெச்ஐவி பாதித்த ரத்தம் செலுத்தப்பட்டதாக புகார் அளித்தனர். இந்த விவகாரத்தில் இதுவரை 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில்,பாதிக்கப்பட்ட பெண்ணும், கணவரும் சாத்தூர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.
இந்நிலையில், கர்ப்பிணிக்கு ஹச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட சம்பவம் குறித்து விசாரிக்க உயர்மட்ட தொழில்நுட்ப குழு அமைக்கப்பட்டுள்ளது. மதுரை ராஜாஜி மருத்துமனையின் ரத்த வங்கி தலைவர் சிந்தா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு விருதுநகர், சிவகாசியில் உள்ள அனைத்து ரத்த வங்கியிலும் ஆய்வு செய்ய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விருதுநகர் சென்று ஆய்வு செய்ய உள்ளார்.