December 25, 2018
சாத்தூரில் கர்ப்பிணிக்கு ஹெச்ஐவி ரத்தம் செலுத்திய விவகாரத்தில் ரத்தவங்கி ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியைச் சேர்ந்த கர்பிணி பெண் ஒருவர் சாத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது அவருக்கு ரத்தசோகை இருப்பது தெரியவந்து டாக்டர்கள் அவருக்கு ரத்தம் ஏற்றவேண்டும் என்று அறிவுறுத்தினர்.
இதையடுத்து, 2 வாரங்களுக்கு முன்பு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள ரத்த வங்கியில் இருந்து ரத்தம் தானமாக பெறப்பட்டு கர்ப்பிணிக்கு செலுத்தப்பட்டது.
இதற்கிடையில், அவருக்கு உடல்நிலை மோசமடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பெண் அதே தனியார் ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். அப்போது அவருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டதில் எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பது தெரியவந்தது. விசாரணையில் கர்ப்பிணி பெண்ணுக்கு செலுத்தப்பட்ட ரத்தத்தில் எச்.ஐ.வி. பாதிப்பு இருந்ததே இதற்கு காரணம் என தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து, அரசு மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியத்தால் ஹெச்ஐவி பாதித்த ரத்தம் செலுத்தப்பட்டதாக புகார் தெரிவித்துள்ளனர்.இதையடுத்து விருதுநகர் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குநர் மனோகரன், துணை இயக்குநர் பழனிச்சாமி ஆகியோர் சம்பந்தப்பட்ட ரத்த வங்கி பொறுப்பாளர்களிடம் விசாரணை நடத்தினர். 5 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் முடிவில் ரத்த வங்கி ஊழியர் வளர்மதி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு மேல்சிகிச்சை மற்றும் இழப்பீடு வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் மனோகரன் தகவல் அளித்துள்ளார்.