December 24, 2018
தண்டோரா குழு
பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்மொழிந்ததற்கு காரணம் என்ன என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நேற்று நடைபெற்ற தி.மு.க. எம்.எல்.ஏ. மஸ்தான் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, மணமக்களை வாழ்த்தினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர்,
நான் நாட்டின் பிரதமராக இருக்கக்கூடிய நரேந்திரமோடியை ‘சேடிஸ்ட்’ என்று நான் சொன்னேன். அதை சொல்லலாமா, சொல்லக் கூடாதா? என்பது இன்றைக்கு ஒரு விவாத பொருளாகி இருக்கிறது.
நான் சொன்னதில் என்ன தவறு, மோடியை தனிப்பட்ட முறையில் நான் ‘சேடிஸ்ட்’ என்று சொல்லவில்லை. அவர் பிரதமராக இருக்கிறார். பிரதமர் என்று சொன்னால் ஓட்டு போட்டவர்களுக்கும் அவர் தான் பிரதமர், ஓட்டு போடாதவர்களுக்கும் அவர் தான் பிரதமர். ஆகவே அப்படிப்பட்ட நிலையில் இருக்கக்கூடிய பிரதமரை சொன்னதற்கு காரணங்கள் இருக்கிறது, ‘ஓகி’ புயலிலே, ‘வார்தா’ புயலிலே இப்பொழுது நடந்து இருக்கக்கூடிய ‘கஜா’ புயலிலே தமிழ்நாட்டிற்கு எவ்வளவு பாதிப்புக்கள் ஏற்பட்டு இருக்கின்றது. அதுவும் அண்மையில் ஏற்பட்ட ‘கஜா’ புயலால் 65 பேர்கள் மாண்டுபோய் இருக்கிறார்கள். அதற்கு ஏதாவது ஒரு ஆறுதல் செய்தி பிரதமரிடத்தில் இருந்து வந்ததா?. நேரடியாக வந்து பார்க்க அவசியமில்லை. காரணம் அவருக்கு நேரமில்லை. வெளிநாடு சுற்றுவதற்கே அவருக்கு நேரம் கிடையாது. அப்படிப்பட்ட நிலையில் ஒரு பிரதமர் இருக்கிறார். தமிழ்நாட்டு மக்களை பற்றி கவலைப்படாத நிலையில் ஒரு பிரதமர் இருக்கிறார் என்று சொன்னால், நான் தனிப்பட்ட மோடியை அல்ல, பா.ஜ.க.வை சேர்ந்த மோடியை அல்ல, பிரதமராக இருக்கக்கூடிய மோடியை சொல்கிறேன். “சேடிஸ்ட் தான், சேடிஸ்ட் தான், சேடிஸ்ட் தான்” என நான் ஒரு முறை அல்ல பலமுறை சொல்வேன்.
நாட்டில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காகவே, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்மொழிந்தேன். யார் உடனடியாக ஒரு மாற்றத்தை இந்தியாவுக்கு ஏற்படுத்த வேண்டும். அப்படி ஏற்படுத்தும் நிலையில் தலைவர் கருணாநிதி பலமுறை இந்திராகாந்தியை அழைத்து “நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக” என்று முழங்கினார். சோனியாகாந்தியை அழைத்து “இந்திராவின் மருமகளே வருக, இந்தியாவின் திருமகளே வெல்க” என சொன்னார். அவர் வழி நின்று நான் சொன்னேன், “ராகுலே வருக, நிலையான ஆட்சி தருக” ஒரு நல்லாட்சியை தருக என சொன்னேன். இதில் என்ன தவறு? நாங்கள் சொல்லாமல் யார் சொல்வது, சொன்னது உண்மை தான்.
ராகுல் காந்தி வேண்டாம் என்று கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த எந்தத் தலைவரும் கூறவில்லை.ஒவ்வொரு மாநிலத்தில் இருக்கக்கூடிய அரசியல் பிரச்சினைகள், அவர்களுக்குள் இருக்கக்கூடிய சில சங்கடங்கள் அதையெல்லாம் சரிசெய்து கொண்டு பின்னால் முடிவு செய்யலாம் என்று அந்தந்த மாநிலத்தில் இருக்கக்கூடிய சில தலைவர்கள் கருதுகிறார்கள்.தவறு என்று யாரும் சொல்லவில்லை, இதுதான் உண்மை. ராகுல்காந்தியை வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை.
‘தமிழகத்தில் மட்டுமல்லாமல், இந்தியாவிலேயே பாஜக வாசனை இருக்கக் கூடாது என்ற நிலையை ஏற்படுத்துவோம். உறுதியெடுக்கக்கூடிய நிலையில் தான் இன்று நாட்டு மக்கள் இருக்கிறார்கள். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.