December 22, 2018
தண்டோரா குழு
டெல்லியில் நடைபெற்று வரும் 31-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பல்வேறு பொருட்களின் வரியை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி கூறியுள்ளார்.
டெல்லியில் இன்று காலை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 31-வது கூட்டம் விக்யான் பவனில் தொடங்கியது. இந்த கூட்டத்தில், கவுன்சில் உறுப்பினர்களாக உள்ள மாநில நிதி அமைச்சர்கள் பங்கேற்று தங்கள் மாநிலம் சார்ந்த கோரிக்கைகள் மற்றும் ஆலோசனைகளை முன்வைத்தனர். தமிழகத்தின் சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றுள்ளார்.
இக்கூட்டத்தில் பல்வேறு பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த 28% ஜிஎஸ்டி வரி குறைக்கப்படுகிறது என்று ஜிஎஸ்டி கூட்டத்துக்கு பின் அருண் ஜெட்லி பேட்டியளித்துள்ளார். மேலும் மாநில அரசுகளுக்கு ரூ.48,000 கோடி இழப்பீடு தரப்பட்டுள்ளது. சிமெண்ட், ஏசி உட்பட 28 பொருட்களுக்கு 28% ஜிஎஸ்டி வரி தொடரும் என்று அறிவித்தார்.
இதனை தொடர்ந்து அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில்,
100 ரூபாய்க்கு மேல் உள்ள சினிமா டிக்கெட்டுக்கு 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கவும், 100 ரூபாய்க்கு கீழ் உள்ள சினிமா டிக்கெட் 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்டு இருப்பதாகவும், தமிழகம் சம்பந்தப்பட்ட 23 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.