December 22, 2018
தண்டோரா குழு
தென்னிந்திய திரைப்படத் தயாரிப்பாளர் சங்க தலைவராக பதவி வகித்து வரும் நடிகரும், தயாரிப்பாளருமான விஷால் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று நடிகர் சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகா சரத்குமாரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சமீபகாலமாக தென்னிந்திய திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் பல்வேறு குழப்பங்கள் மற்றும் பிரச்சனைகள் தொடர்ந்து நிலவிவருகின்றது. தயாரிப்பாளர் சங்கம் முன்பு எப்போதும் சந்தித்திராத பல பிரச்சனைகளை இப்பொழுது தொடச்சியாக சந்தித்துக்கொண்டிருக்கிறது.
இச்சூழ்நிலையில் விஷால் தனது தாயரிப்பாளர் சங்கத்தலைவர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்று சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் கோரிக்கை விடுத்துள்ளனர். நேற்று சமத்துவ மக்கள் கட்சி சார்பகா நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் அக்கட்சியின் தலைவர் சரத்குமார் கலந்து கொண்டார்.
அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,
“நான் சங்கத்தில் பதவி வகித்த போது என் மீது 150 கோடி வரை ஊழல் சொன்னார்கள். அதன்பிறகு 150 கோடி 3 லட்சமானது. இப்போது அதே குற்றச்சாட்டை அவர்கள் சந்திக்கிறார்கள். அதை அவர்கள் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்” என்றார்.
இவரை தொடர்ந்து பேசிய ராதிகாசரத்குமார் கூறுகையில்,
“விஷால் பொறுப்பேற்ற பிறகு நிறைய தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தேர்தலை கருத்தில் கொண்டு அறக்கட்டளை நிதியை எடுத்து சிறு தயாரிப்பாளர்களுக்கு ஓய்வூதியமாக கொடுத்திருக்கிறார். அவர் தலைவர் பதவியில் இருந்து விலகி தேர்தலில் போட்டியிட வேண்டும்” என்று கூறினார்.