December 15, 2018
தண்டோரா குழு
அதிமுகவில் இருந்து சென்றவர்கள் யாரும் சிறப்பாக வளர்ச்சி பெற்றதாக வரலாறு இல்லை. இருந்த நிலையிலிருந்து தாழ்ந்து தான் இருந்துள்ளார்கள் என துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
பிளாஸ்டிக் ஒழிப்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த பேரணியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
ஜெயலலிதாவை நம்பியிருந்தவர்கள் தற்போது அமைச்சர்கள் என பெரிய பதவியை பெற்றுள்ளனர். அதிமுக நிலைத்த தன்மையுடன் நீடித்து நிலைக்கும். செந்தில் பாலாஜி செல்வதால் கடுகு அளவு பாதிப்பு கூட அதிமுகவிற்கு இருக்காது. சோதனைகள் வரும்போது பதவி இருந்தாலும், இல்லையென்றாலும் கட்சிகளில் இருப்பவர்கள் தான் உண்மையான தொண்டர்கள். செந்தில் பாலாஜி தான் திமுகவின் வெற்றிடத்தை நிரப்புகிறாரா? அதிமுகவில் இருந்து சென்றால்தான் திமுகவிற்கு மகிழ்ச்சியா? நிறைவடைகிறதா? திமுக பலமாக இல்லையா? திமுகவில் பள்ளம் உள்ளதா? என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினார்.
அதிமுக எந்த கட்சியிலும் ஆள் பிடிப்பதில்லை. அதிமுக பயணத்தில் யார் வேண்டுமானாலும் சேர்ந்துக்கொள்ளலாம். அதிமுக வாரிசு அடிப்படையிலான கட்சி இல்லை. கிளை கழக செயலாளராக இருந்து கட்சியின் உயர் பதவிக்கி வந்துள்ளார்கள் என்று தற்போதைய முதல்வரை சுட்டிக்காட்டியவர். இந்தியாவிற்கும் உலக , ஜனநாயக நாடுகளுக்கும் அதிமுக உதாரணமாக உள்ளது. முன்னதாக, தமிழக அரசு வேறு யாராலும் செய்ய முடியாத அளவிற்கு கஜா புயல் நிவாரணப் பணிகளை விரைவாக இயந்திர கனியோடு மேற்கொண்டுள்ளது. மத்திய அரசு இன்னும் எந்த உதவியும் செய்யவில்லை. இருப்பினும் மத்திய அரசை எதிர்பார்க்காமல் ரூ.1200 கோடிக்கும் மேல் செலவழித்து நிவாரண பணிகளை தமிழக அரசு செய்து வருவதாக தெரிவித்தார். தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ததால் கால தாமதம் என்பது சொல்லப்படக்கூடிய காரணங்கள் தான் என்றாலும் சரியானது இல்லை என்றவர், இருப்பினும் உத்தேசித்து ஒரு தொகையை மத்திய அரசு வழங்கியிருக்கலாம் என்றார்.