December 15, 2018
தண்டோரா குழு
புதிய புயலால் வடதமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் தரைக்காற்று பலமாக வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
விடுத்துள்ளது.
இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்,
வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக சென்னைக்கு தென் கிழக்கே 730 கிலோ மீட்டர் தொலைவிலும், ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்தில் இருந்து 930 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இந்த தாழ்வு மண்டலம் மணிக்கு 11 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் ‘பெதாய்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் நாளை மறுநாள் பிற்பகல் ஆந்திர மாநிலம் ஓங்கோல் மற்றும் காக்கி நாடா இடையே டிசம்பர் 17ம் தேதி பிற்பகலில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக டிசம்பர் 15,16 ஆகிய தேதிகளில் வட தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மழை பெய்யக்கூடும், ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.மீனவர்கள் டிசம்பர் 17 வரை வங்கக்கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம். சென்னையை பொறுத்தவரை இன்று லேசான மழையும், நாளை மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னையில் தரைக்காற்று வீசும் என தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுவதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து, எண்ணூர், கடலூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.