December 14, 2018
தண்டோரா குழு
ராஜஸ்தான் மாநில முதல்வராக அசோக் கெலாட்டும், துணை முதல்வராக சச்சின் பைலட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
5 மாநில சட்டமன்ற தேர்தலில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஷ்கர் ஆகிய 3 மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளது. இதனையடுத்து 3 மாநிலங்களில் முதல்வர்களை தேர்வு செய்வதற்கான நடவடிக்கை துவங்கியது. மூன்று மாநில முதல்வர்களையும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்ந்தெடுப்பார் என கட்சி தரப்பினர் தெரிவித்து வந்தனர். இதற்காக போபாலில் நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் மத்திய பிரதேசத்தின் முதலமைச்சராக கமல்நாத் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து, ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் 100 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் ஆட்சியமைக்க தீவிரம் காட்டி வருகிறது. இதனால் ராஜஸ்தான் மாநிலத்தின் முதல்வராக யார் தேர்வு செய்யப்படுவார் என்ற கேள்வி எழுந்தது. முதல்வர் பதவிக்கு மூத்த தலைவர் அசோக் கெலாட், சச்சின் பைலட் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. இதற்கிடையே சச்சின் பைலட்டுக்கு ஆதரவாக அவருடைய தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று இரண்டாவது நாளாக சாலை மறியல் மற்றும் டயர்கள் தீ வைத்து எரிப்பு போன்ற சம்பவங்கள் அங்கு நடந்துள்ளது. சச்சின் பைலட் மற்றும் அசோக் கெலாட்டிடம் இன்று தலைமை பேச்சுவார்த்தை நடத்தியது.
இந்நிலையில், முதல்வர் பதவிக்கு அசோக் கெலாட்டும், துணை முதல்வர் பதவிக்கு சச்சின் பைலட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மேலிடம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.