December 14, 2018
தண்டோரா குழு
கோவையில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்க கும்கி யானைகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் கும்கிகளுக்கு டிமிக்கி கொடுத்து காட்டு யானை ஊருக்குள் வருவதாக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நகைச்சுவையுடன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வனத்துறை சார்பாக 24 வது மாநில வனத்துறை விளையாட்டு போட்டிகள் கோவை வனக்கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது. இதனை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், விளையாட்டு கொடியை ஏற்றி, போட்டிகளை துவக்கி வைத்தார்.
இந்த விழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்டப் பேரவை துணை தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். கேரம், வாலிபால், செஸ், கபடி , டென்னிஸ் உள்ளிட்ட போட்டியில் 13 ஊர்களை சேர்ந்த 750 வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். மாநில அளவில் நடைபெறும் இப்போட்டியில் வெற்றி பெறுபவர் வருகின்ற ஜனவரி மாதம் சட்டீஸ்கர் மாநிலத்தில் நடைபெற உள்ள தேசிய அளவிலான வனத்துறை போட்டியில் கலந்துகொள்ள உள்ளனர். இந்த விழாவில் வனக் குழுக்களுக்கு நிதி, பயிர் மற்றும் உயிர் சேதமடைந்தவர்களுக்கு இழப்பீடு என சுமார் 13 லட்சம் ரூபாய் மதிப்பீடில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
முன்னதாக விழாவில் பேசிய அமைச்சர் எஸ் பி வேலுமணி,
கோவை தடாகம்,பன்னிமடை உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைப்பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வனத்துறை அமைச்சரிடம் வலியுறுத்தினார்.
பின்னர் பேசிய அமைச்சர் திண்டுக்கல் ஸ்ரீனிவாசன்,
கோவையில் கும்கி யானைக்கு டிமிக்கி கொடுத்து காட்டு யானை ஓடி விடுகிறது. எப்படி ஓடுகிறது என்பதே தெரியவில்லை என அதிகாரிகள் கூறுகிறார்கள் என நகைச்சுவையுடன் கூறினார். விரைவில் யானை பிரச்சிணை வராமல் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள். யானைகளை அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்த வேறு வழியில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். மேலும், செம்மர கட்டை மற்றும் சந்தன மரம் கடத்தலை தடுக்கும் வகையில் மரம் வெட்டவும் விற்கவும் ஆன்லைன் முறை கடைபிடிக்கப்படுகிறது. வனத்துறையில் மகளிருக்கு தொடர்ந்து முக்கியத்துவம் தரப்படும் என்றார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஸ்ரீனிவாசன்,
வேட்டை தடுப்பு காவலர்களுக்கு சீனியாரிட்டு அடிப்படையில் பணி நிரந்தரம் செய்யப்படுவது தொடர்பாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது. தற்போது யானை தாக்கி உயிரிழக்கும் வனத்துறையினருக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும் நிலையில் வேட்டை தடுப்பு காவலர்களுக்கு இதே அளவு இழப்பீட்டு தொகை கொடுப்பது தொடர்பாக பரிசீலினையில் உள்ளது. கோவை சின்ன தடாகம் பகுதியில் பயிர்களை சேதப்படுத்தி வரும் யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க அகழி மற்றும் வேலி அமைப்பது, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது, யானைகளை இடமாற்றும் செய்வது போன்றவைகள் குறித்து வனத்துறை உயர் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். அங்கு விவாசாயிகள் ஒரு மாதம் பொறுத்து கொள்ளுமாறும் அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.